Friday, April 27, 2007

அது ஒரு பொடா காலம் (பகுதி 3) சுப.வீரபாண்டியன்

அது ஒரு பொடா காலம் (பகுதி 3)

சுப.வீரபாண்டியன்


கூவம் நதியால் சூழப்பட்டு இருந்த சென்னை நடுவண் சிறையின், உயர் பாதுகாப்புத் தொகுதி 1&ல் அடைக்கப்பட்டேன். ஒருவனைப் பயங்கரவாதியாகச் சித்திரிப்பதற்கு அரசு மேற் கொள்ளும் உத்திகளில் ஒன்று, உயர் பாதுகாப்புத் தொகுதியில் சிறைவைப்பது. அந்தத் தொகுதியில் அடைக்கப்படுபவர்கள், பகல் நேரத்தில்கூட, அதனைவிட்டு வெளியில் வந்து பிற கைதிகளுடன் பேசவோ, பழகவோ இயலாது. கொலை, கொள்ளை போன்ற வழக்குகளில் உள்ளே வந்திருப்போருக்கு இருக்கும் பகல் நேரச் சுதந்திரம்கூட என் போன்ற ‘பயங்கரவாதி’களுக்குக் கிடையாது.

அந்தத் தொகுதியில் கீழே நான்கும், மாடியில் நான்குமாக எட்டு அறைகள். ஒவ்வொரு அறைக்குள்ளும் ஒரு கழிப்பறை உண்டு. வெளியில் இரண்டு பொதுக் கழிப்பறைகளும், ஒரு நீர்த் தொட்டியும், கொஞ்சம் திறந்தவெளி இடமும் இருந்தன. மொத்த உலகம் இவ்வளவுதான்!

சிறையதிகாரி என்னை அங்கே அழைத்துக்கொண்டு போனபோது, எட்டு அறைகளுக்குமாகச் சேர்த்து இரண்டே இரண்டு பேர்தான் இருந்தார்கள். நான் மூன்றாவது ஆள். அவர்களில் ஒருவர் பெயர் மோகன். இன்னொருவர் செல்வராஜ்.


உள்ளே நுழைந்ததுமே மோகன் என்னிடம் அன்பாகப் பேசினார். ‘என்னைத் தெரிகிறதா?’ என்று கேட்டார். ‘பார்த்த மாதிரி இருக்கிறது’ என்றேன். அவர் விளக்கம் சொன்னபின், அந்தப் பழைய நிகழ்வு கள் நினைவுக்கு வந்தன.


விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக, 1996&ம் ஆண்டு இறுதியில் நான் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டேன். ஒரு நள்ளிரவில் அங்கு என்னை அழைத்துச் சென்றார்கள். ஏற்கெனவே 53 பேர் அடைக்கப்பட்டு இருந்த, அந்த நீள் அறையில் 54&வதாக என்னை உள்ளே அனுப்பினார்கள்.


குறுக்கும் நெடுக்குமாகவும், தாறுமாறாகவும் எல்லோரும் படுத்திருக்க, நான் ஒரு ஓரமாகப் படுக்க இடம் தேடியபடி நின்றிருந்த போது, ஒரு ஆள் எழுந்து, என்னைப் பற்றி விசாரித்து, எனக்கு மரியாதை கொடுத்து, படுப்பதற்கு ஓர் இடத்தையும் ஒதுக்கித் தந்தார். அவர்தான் மோகன்.


மோகனைப் பற்றிய இன்னொரு செய்தி, அவர் தூக்கிலிடப்பட்ட ஆட்டோ சங்கரின் தம்பி. அதே வழக்கில் கைதாகி உள்ளே இருக்கும் இன்னொருவர்தான் செல்வராஜ். வழக்குக் காரண மாக ‘ஆட்டோ’ செல்வராஜ். அவர்கள் இருவரும் மாடியில் உள்ள அறைகளில் இருக்க, நான் மட்டும் கீழ் அறை ஒன்றில், மாலை ஆறு மணிக்குப் பூட்டப்பட்டேன்.


ஆளரவமற்ற அன்றைய இரவின் நிசப்தம், வாழ்க்கை என்னை எப்படிப் புரட்டிப் போட்டுள்ளது என்பதை எனக்கு உணர்த்திற்று. வீட்டிலும் உறுப்பினர்கள் அதிகம்; வெளியிலும் நண்பர்கள் அதிகம். கலகலப்பாகவே வாழ்ந்து பழகிய நான் தனிமையில், வராந்தாவில் எரியும் ஒரு சின்ன விளக்கின் வெளிச் சத்தில் கம்பிகளைப் பிடித்தபடி நின்றிருந்தேன்.


ஈழ மக்களின் விடுதலைக்காகப் போராடும் புலிகளின் பக்கம் உள்ள நியாயங்களை எடுத்துரைப்பதில் எப்போதும் நான் தயங்கியதில்லை. ஒருமுறை, ‘உங்கள் மீது விடுதலைப்புலி கள் ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளதே?’ என்னும் வினாவுக்கு, ‘அது முத்திரையன்று, என் முகவரி!’ என விடை எழுதியிருந்தேன்.


நாங்கள் கைது செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்த கூட்டத்தில் பேசும்போது, ‘எல்லோரும் ஒரே மாதிரியாகச் சிந்திக்க முடியாது. கருத்து வேறுபாடுகளுக்குரிய களமாக அமைவதுதான் ஜனநாயகம். விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று கருதுவோர், தங்கள் கருத்தை ஊடகங்களிலும், மேடைகளிலும் வெளிப்படுத்த உரிமை இருக்கும்போது அவர்களைப் போராளிகள் என்று கருதும் எங்கள் கருத்தை வெளியிடுவது மட்டும் எப்ப டிப் பயங்கரவாத மாகும்?’ என்று நான் வினா எழுப்பினேன்.


எல்லாவற்றுக்கும் உலகில் ஒரு விலை உள்ளது. இது கருத்து உரிமைக்காக நாம் கொடுக்கும் விலை என்று எண்ணிக்கொண்டு இருந்தபோது, என்னையும் மறந்து உறங்கிவிட்டேன்.


அடுத்த நாள் காலைச் செய்தித்தாள்களில், நான் கைது செய்யப்பட்ட செய்தியோடு, என் வீட்டில் சோதனை (ரெய்டு) நடந்ததாகவும் குறிப்பிடப் பட்டிருந்தது. வீட்டில் சோதனை என்றால், மீண்டும் ஒரு பரபரப்பு அரங்கேற்றப்பட்டு இருக்கும். ஏன் இத்தனை பரபரப்பு? எதற்காக இவ்வளவு உருட்டலும், மிரட்டலும்?


ஜெயலலிதா அரசின் சர்வாதிகாரம் குறித்து, வைகோ தன் அறிக்கை ஒன்றில் மிகத் தெளிவாகக் குறிப் பிட்டு இருந்தார். ‘தமிழகத்தில் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கவும், எதிர்க் கட்சிகளை அச்சுறுத்தவும், தமிழகத்தின் கோடானுகோடி மக்களைப் பாதிக்கும் பல்வேறு அடிப்படைப் பிரச்னைகளிலிருந்து திசை திருப்பவும், அ.தி.மு.க. அரசு பொடா சட்டத்தைப் பயன்படுத்து கிறது’ என்று வைகோ சொல்லியிருப்பது எவ்வளவு உண்மை!


இரண்டு நாள்களுக்குப் பின்னர், சிறையில் என்னைச் சந்திக்க என் குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப் பட்டது. காரைக்குடியில் படித்துக் கொண்டு இருந்த என் இளைய மகன் பாரதிதாசன் கண் கலங்குவதைக் கம்பி வலைகளைத் தாண்டி என்னால் காண முடிந்தது.


‘சிறைச்சாலையைப் பூஞ்சோலை என்று பாடியவரின் பெயரை அல்லவா உனக்கு வைத்திருக்கிறேன். இப்படிக் கலங்கலாமா?’ என்று ஆறுதல் சொன்னேன்.


மனைவியிடம், வீட்டில் நடந்த சோதனை பற்றிக் கேட்டறிந்தேன். சில புத்தகங்களை மட்டும் எடுத்துச் சென்றார்களாம். ‘நீங்கள் வைத்திருந்த பிரபாகரன் படத்தையும் எடுத்துச் சென்றுவிட்டார்கள்’ என்று மனைவி கூற, ‘படமே வெடிகுண்டாய் அவர்களைப் பயமுறுத்தி யிருக்கும், விடு!’ என்றேன்.


25.08.02&ம் நாள் நாளேடுகளில், ஒரு வியப்பான செய்தி வெளியாகி இருந்தது. சிறீலங்காவின் மறு வாழ்வுத் துறை அமைச்சர் ஜெயலத் ஜெயவர்த்தன, ‘செப்டம்பர் 16 அன்று, தாய்லாந்தில் தொடங்க விருக்கும் பேச்சுவார்த்தைக்கு வசதியாக, விடுதலைப் புலிகள் மீது இலங்கை அரசு விதித்துள்ள தடை செப்டம்பர் 6 அன்று விலக்கிக்கொள்ளப்பட உள்ளது’ என்று அறிவித் திருந்தார்.


எந்த நாட்டில் சிக்கலோ, அந்த நாட்டிலேயே தடை நீக்கப்படும்போது, இந்த நாட்டில் தடை இருப்பதும், தடை செய்யப்பட்ட இயக்கம் பற்றிப் பேசி விட்டோம் என்று சொல்லி எங்களைப் பொடாவில் கைது செய்வதும் வேடிக்கை யான செய்தி அன்று; வேதனையான முரண்!


சிறையில் காலை நேரம் செய்தித்தாள்களில் கழியும். பிறகு, நான் கொண்டு சென்றிருந்த நூல்களைப் படிப்பேன். இருப்பினும் எவ்வளவு நேரம் படிக்க முடியும்! பேச்சுத் துணைக்கு ஆள் வேண்டும் போலிருக்கும். மோகன் அதிகம் பேசமாட்டார். செல்வராஜ், பேசுவதை நிறுத்தமாட்டார். அவரு டைய கதையை அவர் சொல்லச் சொல்ல, நானும் சுவைத்துக் கேட்கத் தொடங்கினேன். பின்னாளில் அதுவே, என்னால் எழுதப்பட்ட ‘இடைவேளை’ என்னும் தொடர்கதை ஆனது.


26&ம் தேதி காலை. ‘ஐயா! பாத்தீங்களா?’ என்று செய்தித்தாளை எடுத்துக் கொண்டு செல்வராஜ் ஓடி வந்தார். கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை வீரப்பன் கடத்திவிட்ட செய்தி பெரிதாக வந்திருந்தது.


எனக்கு ஒரே கவலையாகப் போய்விட்டது. என் கவலை நாகப்பா பற்றியது மில்லை; வீரப்பன் பற்றியதுமில்லை. அப்போது, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டு, கர்நாடகச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். ஏதேனும் கலவரம் ஏற்பட்டு, அவருக்கு ஆபத்து ஏதும் நேர்ந்துவிடக் கூடாதே என்று எண்ணி, மனம் கலங்கினேன். ஆனால், நல்லவேளையாக அப்படி ஒன்றும் நடக்கவில்லை.


அதே செய்தித்தாளின் பின் பக்கத்தில் ‘நெடுமாறன் கட்சி அலுவலகத்துக்குச் சீல் வைப்பு’ என்று இன்னொரு செய்தி வந்திருந்தது.


தமிழனத்தின் மீதும், தமிழின உணர்வாளர்களின் மீதும் ஜெயலலிதா வுக்கு ஏன் இத்தனை கோபம் என்று கேள்வி எழுந்தது. பரம்பரை யுத்தம் போன்று அவர் நடந்துகொண்டார்.


நாள்கள் நகர்ந்தன. உறவினர்களும் நண்பர்களும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்களிலும் வந்து பார்த்துச் சென்றனர். அந்தச் சந்திப்புகள், விதவிதமான உணர்ச்சி களின் வெளிப்பாடாக இருந்தன.



நாள் தவறாமல் சிறைக்கு வந்து கொண்டு இருந்த இலெனின், 30.08.02 அன்று விரவில்லை. என் அண்ணன் செல்வமணியும், நண்பர்கள் சிலரும் வந்திருந்தனர்.


‘இந்துவுக்குக் காலையிலிருந்து இடுப்பு வலியாக இருக்கிறதாம். அதனால்தான் இலெனின் வரவில்லை’ என்று அண்ணன் சொன்னார். ‘தலைப் பிரசவம்.... எல்லோருமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்றேன்.



மீண்டும் சிறையில் அறைக்குத் திரும்பிய பின், மகளின் நினைவு மனத்தை வாட்டியது. ‘வந்தது, வந்தது ஞாபகம் & மகளே, வாடாத பூப் போன்ற உன் முகம்’ என்னும் அறிவுமதியின் பாடல் வரிகளை வாய் முணு முணுத்தது.


அன்று வெள்ளிக்கிழமை. அடுத்து இரண்டு நாள்களுக்கு எதையும் தெரிந்துகொள்ள முடியாது. திங்கள் கிழமை வரை நெஞ்சம் அதையே நினைத்துக்கொண்டு இருந்தது. நல்ல செய்திக்காகக் காத்திருந்தேன்!

\ (தொடரும்)

Friday, April 20, 2007

அது ஒரு பொடா காலம் (பகுதி - 2)

அது ஒரு பொடா காலம் (பகுதி - 2)

சுப.வீரபாண்டியன்

பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நான் சென்னை ஐஸ் அவுஸ், நடேசன் தெருவில் உள்ள க்யூ பிரிவு காவல்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.

அங்கே துணைக் கண்காணிப்பாளர் சில கேள்விகளைக் கேட்டார். அங்க அடை யாளங்களைக் குறித்துக்கொண்டார். பேச்சுவாக்கில், ‘‘நீங்கள் சிறைக்குப் போவது, இதுதான் முதல் முறையா?’’ என்று கேட்டார்.

‘‘இது முதல் முறை இல்லை’’ என்ற நான், சிறிய இடைவெளி விட்டு, ‘‘கடைசி முறையும் இல்லை’’ என்றேன். இந்த ‘அதிகப்பிரசங்கித்தனம்’ அவரிடமிருந்து ஒரு சிரிப்பை வரவழைத்தது. ‘திருத்த முடியாத ஆள் போலிருக் கிறது’ என்று நினைத்திருக்கக்கூடும். வேறு எதுவும் கேட்கவில்லை.

காவலர்களையும் ஆய்வாளரையும் பார்த்து, ‘‘உடனே புறப்படுங்க. கொஞ்ச நேரம் ஆச்சுன்னா விஷயம் தெரிஞ்சு பத்திரிகைக்காரங்க வந்துடுவாங்க’’ என்றார் துணைக் கண்காணிப்பாளர்.

மடமடவென்று வேலைகள் நடந்தன. என்னை அழைத்துக்கொண்டு எல்லோரும் புறப்பட்டனர். மாடிப்படிகளைவிட்டுக் கீழிறங்கி வந்தவுடன், அவர்களுக்கு ஒரே அதிர்ச்சி!

வாயில் கதவுகளுக்கு வெளியே புகைப்படக் கருவிகளுடன், ஏராளமான பத்திரிகை, தொலைக்காட்சி நண்பர்கள் தயாராக எங்களை எதிர்பார்த்து நின்றிருந்தனர்.

இதனைச் சற்றும் எதிர்பாராத காவலர்கள், எப்படி செய்தி கசிந்தது என்று விளங்காமல், என்னை அழைத்துக்கொண்டு பின்புறமாகச் சென்றனர். காவல் ஊர்தி பின்புறம் வரவழைக்கப்பட்டது. என்னை அதில் ஏற்றியதும், வாயில் கதவுகளைத் திறந்தார்கள். மின்னல் வேகத்தில், ஊர்தி அந்த இடத்தைக் கடந்து சென்றுவிட்டது.

பூவிருந்தவல்லியில் உள்ள பொடா சிறப்பு நீதிமன்றத்தை நோக்கி எங்கள் வாகனம் சென்றது.

இந்தப் பயணம் எங்கே தொடங்கியது என்று நான் நினைத்துப் பார்த்தேன்.

2002 ஏப்ரல் 7 அல்லது 8&ம் தேதியாக இருக்க வேண்டும். நானும், ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீதும், கோடம்பாக்கத்தில் உள்ள ஓர் உணவகத்தில் அமர்ந்திருந்தபோதுதான், இதற்கான தொடக்கம் ஏற்பட்டது.

நண்பர் சாகுலுடன் அவ்வப்போது இப்படி உரையாடுவது வழக்கம். கவிஞர் அறிவுமதி, இயக்குநர் சீமான், அன்புத் தென்னரசன் ஆகியோரும் சில வேளைகளில் இணைந்துகொள் வார்கள். பல நிகழ்ச்சிகள், அடுத்த கூட்டங்கள் முதலானவை அங்கு முடிவு செய்யப்படுவதுண்டு. குறிப்பிட்ட அந்த நாளில், நாங்கள் இருவர் மட்டுமே!

‘தமிழ் முழக்கம்’ சார்பில், ஒவ்வொரு மாதமும் ஒரு திறனாய்வுக் கூட்டத்தை சாகுல் நடத்திக்கொண்டு இருந்தார். அந்தக் கூட்டம், வடபழனியில் உள்ள ஒரு சிறிய திருமண மண்டபத்தில் நடக்கும். திருமண நாளாக இருந்தால் மண்டபம் கிடைக்காது என்பதால், ஒவ்வொரு மாதமும் ‘அஷ்டமி’யன்று கூட்டம் நடத்தலாம் என்று முடிவு செய்தோம். பகுத்தறிவாளனாகிய நான், பஞ்சாங்கம் பார்த்து அஷ்டமி நாளை அவருக்குக் குறித்துக் கொடுப்பேன். அன்று, அடுத்த மாத ‘அஷ்டமிக் கூட்ட’த்தை எப்படி நடத்தலாம் என்று பேசிக்கொண்டு இருந்தோம்.

முதலில், நூல்களுக்கான திறனாய்வுக் கூட்டமாகத்தான் அது நடந்தது. பிறகு, நல்ல திரைப்படங்களையும் திறனாய்வு செய்தால் என்ன என்று தோன்றியது. ‘அழகி’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.

ஏப்ரல் 8&ம் தேதி, எனக்குப் புதிய சிந்தனை ஒன்று தோன்றியது. 2002 பிப்ரவரி 22 அன்று, ஸ்ரீலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக் கும் ‘புரிதல் ஒப்பந்தம்’ ஏற்பட்ட பிறகு, ஏப்ரல் 10&ம் தேதியன்று, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், உலகச் செய்தியாளர் களுக்கு, வன்னியில் பேட்டி அளிக்கப்போகிறார் என்னும் செய்தி, அன்று பரபரப்பாகப் பேசப்பட்ட ஒன்று ஆகும்.

‘அந்தப் பேட்டியை ஏன் இந்த முறை நாம் திறனாய்வு செய்யக் கூடாது’ என்று நான் சாகுலிடம் கேட்டதும், துள்ளிக்குதித்து விட்டார். அவருக்கு ஒன்று பிடித்து விட்டால், பிறகு வேறு எது குறித்தும் அவர் சிந்திக்க மாட்டார். அதைச் செய்து முடிக்கும் வரை, காரியமே கண்ணாயிருப்பார்.

அஷ்டமி, இடம் எல்லாம் மாறிப் போய்விட்டது. ஏப்ரல் 13&ம் தேதி, சென்னை, அண்ணா சாலையில் உள்ள ஆனந்த் திரையரங்கைப் பதிவுசெய்து விட்டார். நெடுமாறன் ஐயா, தேனிசை செல்லப்பா, புதுக்கோட்டைப் பாவாணன், கவிஞர் அறிவுமதி, வழக்குரைஞர் அருள்மொழி, மருத்துவர் தாயப்பன் அனைவரிடமும் அன்று மேடையில் பேசுவதற்கு ஒப்புதல் வாங்கிவிட்டார்.

நான்கே நாள்கள் இடைவெளியில் நண்பர் சாகுல் ஒரு பரபரப்பை ஏற்படுத்திவிட்டார். அந்தப் பரபரப்பு, காவல்துறையிடம் ஓர் எச்சரிகை உணர்வை ஏற்படுத்தியிருக்கக்கூடும். அதனால், நெடுமாறன் ஐயா எழுதியுள்ள ‘தமிழீழம் சிவக்கிறது’ என்னும் நூலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முயற்சித்ததாகச் சொல்லி, ஏப்ரல் 12&ம் தேதி மாலையே, சாகுலைக் காவல் துறை யினர் கைது செய்து விட்டனர். ஏறத்தாழ 1,000 புத்தகங்களையும் பறிமுதல் செய்துவிட்டனர். அந்தப் புத்தகம் தடை செய்யப்பட்ட நூல் அன்று. ஏற்றுமதி, இறக்குமதிக்கு சாகுலிடம் முறையான உரிமமும் உள்ளது. ஆனால், அது பற்றி யெல்லாம் கவலைகொள்ளாமல், அவரைக் கைது செய்துவிட்டனர்.

அவரைக் கைது செய்துவிட்டால், விழா நடக்காது என்று அவர்கள் கருதியிருக்கலாம். விளைவு எதிர்மாறாக ஆகிவிட்டது.

மாலை 4 மணிக்கே, அரங்குக்குக் கூட்டம் வரத் தொடங்கிவிட்டது. ஆறு மணியளவில் கூட்டம் தொடங்கிய போது, அந்த இடமே உணர்ச்சிப் பிழம்பாக இருந்தது.

அன்று காலைதான், ‘விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினால், பொடா சட்டம் பாயும்’ என்று முதல்வர் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஏறத்தாழ மூன்று மணி நேரம் மிகச் சிறப்பாகக் கூட்டம் நடந்தது. அன்று அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தற்காகவே நெடுமாறன் ஐயாவும், நானும் கைது செய்யப்பட்டுள்ளோம்.

ஏப்ரல் 8&ம் தேதி, ஒரு உணவகத்தில் விழுந்த விதை, ஆகஸ்ட் மாதம் மரமாக வளர்ந்துவிட்டது. அதே நேரம், அந்தக் கூட்டம் ஒருவேளை நடக்காமல் இருந் திருப்பினும், வேறு ஒரு கூட்டத்தைக் காட்டி எங்களை அந்த அம்மையார் கைது செய்திருப்பார் என்பதே உண்மை.!

இவ்வாறு பல்வேறு வகையான சிந்தனைகளில் மூழ்கியிருந்த நான், காவல் ஊர்தி பூந்தமல்லி நீதி மன்றம் வந்துவிட்டதை உணர்ந்து, எண்ணங்களிலிருந்து விடுபட்டேன்.

நீதிமன்ற வாயிலில் என்னை எதிர்பார்த்து பரந்தாமன், திருச்சி சௌந்தரராசன், பத்மநாபன் முதலான இயக்கத் தோழர்கள் பலரும், என் அண்ணன் சுவாமி நாதன், என் மகன் இலெனின் ஆகியோரும் காத்திருந்தனர். எவரும் என்னை நெருங்குவதற்குக் காவல்துறை அனுமதிக்கவில்லை.

ஏ.கே&47 துப்பாக்கி ஏந்திய காவலர்கள் என்னைச் சூழ்ந்து வர, நான் நீதிமன்றத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டேன். அந்தக் காட்சியைப் பார்ப்பவர் களுக்கு, ஏதோ கார்கில் போரி லிருந்து, அந்நிய நாட்டுப் படை வீரனை அழைத்து வருவது போலிருக்கும்.

வழக்கைக் கேட்ட நீதிபதி, என்னை செப்டம்பர் 13 வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி ஆணையிட்டார். எங்கள் வழக்கறிஞர் புருசோத்தமன் கேட்டுக்கொண்ட தற்கிணங்க, மகனை மட்டும் அருகில் வந்து பேச அனுமதிக்குமாறு நீதிபதி கூறினார். விடைபெற்றேன். பெரியப்பா மூவரிடமும், அத்தை யிடமும், தம்பி பாரதிதாசனிடமும் செய்தியைக் கூறச் சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.

‘க்யூ’ பிரிவு அலுவலகத்தில் ஏமாற்றமடைந்த இதழியலாளர்கள், இங்கு சரியாக வாய்ப்பைப் பயன் படுத்திக்கொண்டனர். ‘‘சொல்லுங் கள், என்ன சொல்ல விரும்பு கிறீர்கள்?’’ என்று தொடர்ந்து கேட்டனர்.

ஓரிரு நிமிடங்களில் நிதானமாக நான் எண்ணியதைச் சொல்லி முடித்தேன்.

‘‘அங்கும் போர் நடக்கவில்லை. இங்கும் கலவரம் ஏதுமில்லை. பிறகு ஏன் பொடா என்று தெரியவில்லை. இங்கே நடப்பது ஜெயலலிதா ஆட்சியா, சந்திரிகா ஆட்சியா என்றே சந்தேகம் வருகிறது. தமிழ் இங்கு கெட்ட வார்த்தையாகிவிட்டது. தமிழ் உணர் வாளர்களெல்லாம் இந்த அரசுக்குத் தீவிரவாதியாகத் தெரிகின்றனர். இந்நிலைமைகள் மாறியே தீரும். வரலாறு எங்களை விடுதலை செய்யும்’’ என்றேன்.

என்னை ஏற்றிக்கொண்டு ஊர்தி நகர்ந்தது. இயக்கத் தோழர்கள் முழக்கம் எழுப்பினர்.

எந்தச் சிறைக்குக் கொண்டுசெல் கின்றனர் என்று தெரியவில்லை. அப்போது வைகோ வேலூரிலும், நெடுமாறன் ஐயா கடலூரிலும், கணேச மூர்த்தி மதுரையிலும், பாவாணன் கோவையிலுமாகப் பல்வேறு சிறை களில் இருந்தனர். ‘நமக்குப் பாளையங் கோட்டையோ என்னவோ?’ என்று எண்ணிக்கொண்டு இருந்தேன்.

என் எண்ணத்துக்கு மாறாக, சென்னை நடுவண் சிறைக்கே என்னை அழைத்துச் சென்றனர்.

மதியம் 12.15 மணிக்கு நான் சிறைக்குள் நுழைந்தேன். நான் உள்ளே சென்றபின், அந்தப் பெரிய கதவுகள் அடித்து மூடப்பட்டன.

அவை மீண்டும் திறக்க, ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என்பது, எனக்கு அப்போது தெரியாது!

\ (தொடரும்)

நன்றி: ஆனந்த விகடன்

Tuesday, April 17, 2007

அது ஒரு பொடா காலம் - சுப. வீரபாண்டியன் -1



அது ஒரு பொடா காலம் - சுப. வீரபாண்டியன் -1


பேரா. சுப. வீரபாண்டியன் அவர்கள் ஆனந்த விகடன் இதழில் தனது பொடா சிறை அனுபவங்களை ‘அது ஒரு பொடா காலம்’ என்னும் தலைப்பில் தொடராக எழுத தொடங்கியுள்ளார்.

அவரின் அனுபவ பதிவுகள் இங்கே நண்பர்களுக்காக..


அறியாதவர்களும் என்னை அறிந்து கொள்ளும் வகை செய்த ஜெயலலிதாவுக்கு!

இரண்டாவது நன்றி & சிறையிலிருந்து மீட்டெடுத்து, மறுக்கப்பட்ட பேச்சுரிமையை மறுபடியும் வழங்கி, இப்போது பொடாவிலிருந்து முழுமையாகவே விடுவித்திருக்கும் கனிவு மிகுந்த கலைஞருக்கு!



விகடனுக்கும் உங்களுக்கும் என் நன்றி எப்போதும்!



இரவு 11.30 மணிக்கு விளக்கை அணைத்துவிட்டுக் கண்ணயரத் தொடங்கிய வேளையில், தொலை பேசி மணி ஒலித்தது.

இரவில் காலந்தாழ்ந்து தொடர்புகொள்வதற்காக வருத்தம் தெரிவித்த அவர், சன் தொலைக்காட்சியின் நிருபர் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.

‘‘சொல்லுங்க... என்ன செய்தி?’’ என்று கேட்டேன்.

‘‘ஒண்ணுமில்லே... ஒரு சின்ன கறுப்புக் கம்பி கேட்ல 28&ன்னு நம்பர் எழுதியிருக்கே, அதுதானே உங்க வீடு?’’ என்றார்.

எனக்குள் ஒரு சின்ன வியப்பு. ‘‘நீங்க இப்போ எங்கேர்ந்து பேசுறீங்க?’’ என்றேன்.

‘‘இதுதான் உங்க வீடுன்னா, உங்க வீட்டு வாசல்லயிருந்துதான்’’ என்றார்.

என் வீடு வரை வந்தவர் உள்ளே வரவோ, என்னுடன் பேசவோ முயற்சிக்காமல், என் வீடு எது என்பதை மட்டும் உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புவது & அதுவும் இந்த நள்ளிரவில் & ஏன் என்னும் வினா எனக்குள் எழுந்தது.

அவரே அதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்தினார்... ‘‘நாளைக்கு அதிகாலையில் உங்களை பொடாவுல கைது செய்யப்போறாங்கன்னு ஒரு தகவல் கிடைச்சுது. அப்பிடி நடந்தா, அதை உடனே படமாக்குறதுக்குத் தான், இப்பவே உங்க வீட்டைப் பார்த்து வெச்சுக்கலாம்னு வந்தோம்’’ என்று விளக்கினார்.

நான் அப்போது தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தேன். அவ்வியக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் பத்துப் பன்னிரண்டு நாள்களுக்கு முன்பு (2002 ஆகஸ்ட்&1) பொடாவில் கைது செய்யப்பட்டதி லிருந்து, நானும் இயக்கத்தைச் சார்ந்த வேறு பொறுப்பாளர்கள் சிலரும் கைது செய்யப்படலாம் என்ற ஐயம் எல்லோருக்கும் இருந்தது. எனவே, தொலைக்காட்சி நண்பர் சொன்ன செய்தி, எனக்குள் பெரிய அதிர்ச்சி எதையும் ஏற்படுத்திவிடவில்லை.

ஏற்கெனவே ஏழு முறை சிறை சென்ற அனுபவமும் இருக்கிறது. இருந்தாலும், ஒவ்வொரு சிறை வாழ்வும் ஒரு புதிய அனுபவம்!

சற்றுப் புரண்டு படுத்த நான், மீண்டும் தொலைபேசியை எடுத்து, என் மூத்த மகன் இலெனினுக்குப் பேசினேன்.

‘‘தம்பி, நாளைக்கு அதிகாலையில கொஞ்சம் வீட்டுக்கு வாப்பா!’’

‘‘ஏம்ப்பா, என்ன விஷயம்?’’

மெல்லிய குரலில், சற்று முன் வந்த தொலைபேசிச் செய்தியைச் சொல்லி முடித்தேன். ‘கிசுகிசு’ என்று மெதுவாகப் பேசும்போதுதான், அருகில் உள்ளவர்களுக்குச் சத்தமாகக் கேட்கும் என்பார்கள். முதலில் உரத் துப் பேசியபோது, நன்றாக உறங்கிக் கொண்டு இருந்த என் மனைவியும், நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த என் மகள் இந்துவும் இப்போது விழித்துக்கொண்டனர்.

‘‘என்ன.. என்ன..?’’ &அவர்கள் குரலில் பதற்றம்! இனி மறைத்துப் பயனில்லை என்று கருதி, செய்தியை மெள்ள மெள்ள எடுத்துச் சொன்னேன்.

‘‘என்னங்க இது... அமெரிக்காவில் இருந்து பொண்ணைப் பிரசவத்துக்குக் கூட்டிட்டு வந்திட்டு, இப்ப நீங்கபாட்டுக்கு ஜெயிலுக்குப் போயிட்டா, நான் ஒருத்தியா என்ன செய்யமுடியும்?’’ & மனைவியின் குரல் உடைந்து வெளிப்பட்டது.

‘‘பெரியவனுக்கு இன்னும் சரியான வேலை கிடைக்கலே. சின்னவனுக்குப் படிப்பு, ஹாஸ்டலுக்குப் பணம் அனுப்பணும். இருந்த வேலையையும் விட்டுட்டீங்க. பென்ஷனை மட்டும் வெச்சுக் கிட்டு எப்படிச் சமாளிக்கிறது?’’ என்று பொருளாதாரச் சிக்கல்களும் வெளிப்பட்டன.

‘‘தைரியமா இரு! நண்பர்கள் இருக்காங்க... அண்ணன்லாம் இருக்காங்க... பார்த்துக்குவாங்க!’’ என்று ஆறுதல் சொன்னேன். பிறகு பல செய்திகள் குறித்தும் பேசி முடித்து, நாங்கள் தூங்கியபோது, இரவு மணி இரண்டைத் தாண்டிவிட்டது.

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம். அழைப்பு மணி எழுப்பியது. காவல் துறையினர்தான் என்று எண்ணிக் கதவைத் திறந்தபோது, மகன் இலெனின் நின்றிருந்தான்.

‘‘நம்ம தெரு முனையில கல்யாணி மண்டபத்துக்கிட்ட ரெண்டு டி.வி. வேன் மட்டும் நிக்குதப்பா!’’ என்றான்.

விரைந்து இயங்கி, குளித்து முடித்து, ஒரு பெட்டியில் தேவையான துணிகளையும், சில புத்தகங்களையும் எடுத்து வைத்துக்கொண்டு, சிறைப் பயணத்துக்குத் தயாரானேன்.

ஆறு, ஏழு, எட்டு மணியாகிவிட்டது. ஒருவரும் வரவில்லை. ‘‘நேத்து ராத்திரி வந்த செய்தி வதந்தியா இருக்குமோ?’’ என்றாள் இந்து. வதந்தியாக இருந்து விட வேண்டும் என்பது அவள் விருப்பம். மெள்ளச் சிரித்தபடி, ‘‘உண்மையா இருக்கத்தான் வாய்ப்பு அதிகம், பாக்கலாம்’’ என்றேன். இறுதியில் அது வதந்தியாகத்தான் போய்விட்டது. ஒன்பது மணி வரை காத்திருந்துவிட்டு தொலைக்காட்சி நண்பர்களும் ‘ஒருவிதமான விரக்தி யோடு’ விடைபெற்றுச் சென்றுவிட்டனர்.

நானும் மயிலாப்பூர் ‘தென் செய்தி’ அலுவலகத்துக்குப் புறப்பட்டேன்.

நானும் நெடுமாறன் ஐயாவின் மகள் உமாவும் சேர்ந்து, செய்தித் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டோம். கைது, அது குறித்த கண்டனங்கள், இயக்கம் நடத்தவிருக்கும் எதிர்வினை கள் என எல்லாவற்றையும் தொகுத்துக் கொண்டு இருந்தோம்.

ஐயா கைது செய்யப்பட்ட சில தினங்களிலேயே, மாநிலம் முழுவதும் உள்ள பொறுப்பாளர்களைச் சென் னைக்கு வரவழைத்துக் கூட்டத்தை நடத்தினோம். கூட்ட முடிவில், ‘‘உங்கள் தலைவரைப் பொடாவில் கைது செய்துவிட்ட இன்றைய நிலையில், விடுதலைப் புலிகள் போராட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?’’ என்று இதழாளர்கள் கேட்டபோது, ‘‘அவர்கள் அம்மண்ணின், மக்களின் விடுதலைக்காகப் போராடிக்கொண்டு இருக்கின்றனர். அவர்களின் போராட்டத்தை நாங்கள் எப்போதும் ஆதரிப் போம்’’ என்று உறுதிப்படக் கூறினோம். ஏறத்தாழ அப்போதே எங்கள் சிறைப் பயணம் முடிவாகிவிட்டது.

ஒரு நண்பர் தொலைபேசியில் அழைத்து, ‘‘தொலைக்காட்சியைப் பாருங்கள், ஒரு அதிர்ச்சியான செய்தி ஓடிக்கொண்டு இருக்கிறது’’ என்றார். ‘தமிழர் தேசிய இயக்கத்தைத் தமிழக அரசு தடை செய்துள்ளது’ என்பதே அச்செய்தி!

அடுத்து என்ன நடக்கும், யார் யாரெல்லாம் கைது செய்யப்படுவார்கள், அலுவலகம் இயங்க அனுமதிப் பார்களா என ஆயிரம் வினாக்கள் எழுந்தன. எங்கள் வழக்குரைஞர் சந்துருவைத் தொடர்புகொண்டு, பல செய்திகளைத் தெரிந்துகொண்டேன். தடையைக் கண்டித்து ஓர் அறிக்கை வெளியிட்டேன்.

தமிழர் தேசிய இயக்கம், 1908&ம் ஆண்டுக் குற்றவியல் திருத்தச் சட்டத்தின்கீழ் தடை செய்யப்பட்டிருந்தது. காந்தியடிகள் எதிர்த்துப் போராடிய சட்டங்களில் ஒன்று அது. அதன்கீழ் 1950&ம் ஆண்டு மக்கள் கல்வி இயக்கம் (றிமீஷீஜீறீமீs ணிபீuநீணீtவீஸ்மீ ஷிஷீநீவீமீtஹ்) எனும் ஓர் அமைப்பு மட்டுமே தடை செய்யப் பட்டது. அந்தத் தடையை எதிர்த்து, அவ்வமைப்பின் நிறுவனர் வி.ஜி.ராவ் நீதிமன்றம் சென்றார். தடை செல்லாது என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. அதற்குப் பிறகு, கடந்த 50 ஆண்டுகளில் அல்&உம்மாவும், தமிழ்த் தேசிய இயக்கமும்தான் தடை செய்யப்பட்டுள்ளன. மேற்காணும் விவரங்களையெல்லாம் என் அறிக்கையில் கூறியிருந்ததோடு, தடையை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம் என்றும் அறிவித்திருந்தேன்.

அடுத்த நாள், இந்திய விடுதலை நாளையட்டிக் கோட்டையில் கொடி ஏற்றிய முதல்வர், தமிழின உணர்வாளர்களுக்கு மறைமுகமாகச் சில எச்சரிக்கைகளை விடுத்தார். அவர் உரையில், ‘‘மொழி, இன, வட்டார உணர்வு என்ற போர்வையில், சில சக்திகள் தலைதூக்க முற்பட் டுள்ளன. அந்தப் பிற்போக்குச் சக்திகளுக்குப் பாடம் புகட்ட, இங்கே தடந்தோள்கள் உண்டு’’ என்று குறிப் பிட்டிருந்தார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் விடுதலை நாள் உரை, அடுத்தடுத்தும் நடவடிக்கைகள் தொடரும் என்பதையே உணர்த்தியது.

தென்செய்தி வேலையை முடித்து விட்டு தியாகராய நகரில் அறை எடுத்துத் தங்கியிருந்த, இயக்கத்தின் இன்னொரு பொதுச் செயலாளர் பரந்தாமனைச் சந்தித்தேன். அடுத்து இயக்கத்தை எப்படிக் கொண்டு செல்வது என்று குறித்து உரையாடினோம்.

‘‘நாளை காலையில் கடலூருக்குப் போய், சிறையில் தலைவரைச் சந்திச்சு அவருடைய யோசனைகளைக் கேட்டுக்கிட்டுப் பிறகு எல்லாத்தையும் முடிவு செய்யலாம்’’ என்றார் பரந்தாமன். எனக்கும் அதுவே சரி என்றுபட்டது.

அடுத்த நாள் (16.08.02) அதிகாலையிலேயே எழுந்து, கடலூர் புறப்படத் தயாரானேன். ‘‘தேநீராவது குடிச்சுட்டுப் போங்க’’ என்று மனைவி சொல்ல, ‘சரி’ என்று சொல்லிக் காத்திருந்தேன்.

சரியாகக் காலை 6.10&க்கு அழைப்பு மணி ஒலித்தது.

கதவைத் திறந்தால்...

காக்கிச் சட்டைப் பட்டாளமே காத்திருந்தது.

துப்பாக்கி ஏந்திய, துப்பாக்கி ஏந்தாத, சீருடை அணிந்த, சீருடை அணியாத, ஆண், பெண் காவலர்கள் பலரும் நின்றிருந்தனர். என்னைக் கைது செய்வதற்கான நீதிமன்ற ஆணையோடு காவல்துறை அதிகாரி யும் பிறரும் வீட்டுக்குள் நுழைந்தனர்.

பொடாவின் அழைப்பைப் புன்னகையோடு வரவேற்றேன்!

Tuesday, April 03, 2007

பொடா வழக்கிலிருந்து நெடுமாறன், சுப.வீ விடுதலை

பொடா வழக்கிலிருந்து நெடுமாறன், சுப.வீ விடுதலை

பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகியோர் மீது போடப்பட்டிருந்த பொடா வழக்கிலிருந்து அவர்களை விடுதலை செய்து இன்று பொடா சிறப்பு நீதீமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இத்தீர்ப்பின் மூலம், இவர்களுக்கு பொதுக் கூட்டங்களில் பேசுவதற்கு இருந்த தடையும், வெளிநாடுகளுக்கு செல்வதற்கு இருந்த தடையும் நீங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2002-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பை ஒட்டி 2002, ஏப்ரல் 13-ஆம் நாள், சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதற்காக பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகியோர் மீது பொடா வழக்கு போடப்பட்டது.

அதன் அடிப்படையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு காலம் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் பிணையில் வெளிவந்த பிறகும், பொதுக் கூட்டங்களில் பேசக் கூடாது, ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்கக் கூடாது, தடை செய்யப்பட்ட இயக்கங்களை பற்றி பேசக் கூடாது, வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என பல விதத் தடைகள் அவர்கள் மீது போடப்பட்டிருந்தன.

இந்த நிலையில், பொடா மறு ஆய்வுக் குழு இந்த வழக்கு செல்லாது என்று தீர்ப்பளித்ததன் அடிப்படையில், தமிழக அரசு, பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை திரும்பப் பெறும் மனுவை அளித்தது.

அம்மனுவை ஏற்றுக் கொள்ள மறுத்த பொடா சிறப்பு நீதிமன்றம், அவர்கள் மீதான வழக்கில் சான்றுகள் உள்ளன என்ற அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், இந்த நிலையில் வழக்கை திரும்பப் பெற இயலாதெனக் கூறியது.

பின்னர், தமிழக அரசின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பொடா மறு ஆய்வுக் குழு இவ்வழக்கு அடிப்படை ஆதாரமற்றது என தீர்ப்பளித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, அந்த அடிப்படையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும் வழக்கை அரசு திரும்பப் பெறலாம் என வாதிட்டார்.

அவரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட பொடா சிறப்பு நீதிமன்றம், இன்று, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகிய அனைவரையும் இவ்வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

-சசி