Friday, December 29, 2006

"நான் தி.மு.க ஆதரவாளன் தான்"

"நான் தி.மு.க ஆதரவாளன் தான்" Print E-mail
சுப.வீரபாண்டியன் நேர்காணல்

தமிழகத்தில் இயங்கிவரும் தமிழ்த்தேசியவாதிகளில் சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, பெண்னுரிமை ஆகிய பெரியாரியல் அடிப்படைகளோடு செயல்பட்டு வரும் ஒருசிலத் தமிழ்த்தேசியவாதிகளில் சுப.வீரபாண்டியனும் ஒருவர். பேராசியராகக் கல்லூரியில் பணியாற்றியபோதே விடுதலைப்புலிகளை ஆதரித்ததற்காக கைது செய்யப்பட்டவர். சென்ற ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்டவர். பகத்சிங்கும் இந்திய அரசியலும், பெரியாரின் இடதுசாரித்தமிழ்த்தேசியம் ஆகியவை இவரது முக்கியமான நூல்கள் இனி, நந்தன் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றிய சுபவீ தமிழ் தமிழர் இயக்கம், தமிழர் கழகம், தமிழர் தேசிய இயக்கம் ஆகிய இயக்கங்களிலும் களமாற்றியவர். இப்போது திராவிட இயக்க தமிழர் பேரவை என்னும் அமைப்பையும் தொடங்கியிருக்கிறார். அவரை நமது தமிழ்மணப்பூங்காவிற்காகச் சந்தித்தோம்.

ஆண்டன்பாலசிங்கத்தின் மறைவால் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தொய்வு ஏற்படுமா?

ஆண்டன் பாலசிங்கத்தின் மறைவு உண்மையிலேயே ஈடுசெய்யமுடியாத இழப்பு. அது புலிகள் அமைப்புக்கு மட்டுமல்லாது உலகமெங்கும் வாழும் தமிழ் மகக்ளுக்கான இழப்பு.
ஒரு போராட்ட இயக்கத்திற்கு ராணுவத்தளம் மட்டும் போதாது, அரசியல் தளமும் அவசியம். அத்தகைய தளத்தை அமைத்துத் தந்தவர் ஆண்டன் பாலசிங்கம்.
ஆனாலும் பாலசிங்கத்தின் மறைவால் விடுதலைப்போராட்டம் பின்னடைவைச் சந்திக்காது என்றே கருதுகிறேன். தொடக்ககாலமாக இருந்தால் ஒருவேளை அத்தகைய பின்னடவைச் சந்தித்திருக்கக் கூடும். ஏனென்றால் உலகநாடுகளின் மனசாட்சியைத் தட்டி எழுப்பியவர் பாலசிங்கம். அதனால் அவ்வாறு ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனால் இப்போது உலகமெங்கும் புலிகள் தங்களை நிரூபித்திருக்கிறார்கள். உலக அரங்கில் தவிர்க்கமுடியாத சக்தியாக உருவாகியிருக்கிறார்கள். எனவே விடுதலைப்போராட்டத்தில் தொய்வு ஏற்பட வாய்ப்பே இல்லை.

முல்லைப்பெரியாறுப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன?

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அளவில், உலக அளவில் நதிநீர்ப்பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. அவைகள் நதிநீர்த்தாவாச் சட்டத்திற்குட்பட்டுத் தீர்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இங்கு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் கூட போதுமான தீர்வு ஏற்படவில்லை. மத்திய அரசோ, உச்சநீதிமன்றமோ நம் பக்கமுள்ள நீதியை உறுதி செய்யத் தயாராக இல்லை.

அண்டை மாநிலத்தோடு நாம் முரண்படமுடியாதுதான். ஆனால் இத்தகைய போக்குகள் தொடர்ந்தால் அநீதிக்கு எதிராக தமிழகமே திரண்டு குரல் கொடுக்கவேண்டி நேரிடும். காவிரிப்பிரச்சினையை விட முல்லைப் பெரியாறு பிரச்சினையில் வேறுசில தீர்வுகள் இருக்கின்றன. இங்கிருந்து கேரளத்திற்குச் செல்லும் உணவுப்பொருட்களைத் தடுத்தாலே கேரளம் அடிபணியும். ஆனால் அத்தகைய முடிவுக்கு நம்மைக் கேரளம் தள்ளிவிடக்கூடாது.

இப்போது நடக்கும் பேச்சுவார்த்தையும் தோல்வியுற்றால் நீதிமன்றத்தைத்தான் அணுகவேண்டும். நீதிமன்றம் நம் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீதி வழங்கினால்தான் இந்தியா என்பது ஒரே நாடு என்ற எண்ணம் நமக்குத் தோன்றும்.

ராஜிவ்படுகொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 26 தமிழர்களுக்காக தமிழ்த்தேசிய இயக்கங்கள் மரணதண்டனை ஒழிப்பு இயக்கம் நடத்தின. ஆனால் அதுபோல அப்சல் போன்றவர்கள் பாதிக்கப்படும்போது நடத்தவில்லையே?
அது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் இப்போது அப்சலுக்காக குரல் கொடுக்கும் இஸ்லாமிய அமைப்புகளும் கூட அப்போது ராஜிவ் கொலைக்குற்றவாளிகளுக்காக குரல் கொடுக்கவில்லை என்பதும் உண்மை. ஆனால் இரண்டு பிரச்சினைகளுக்குமே குரல் கொடுக்கவேண்டும் என்பதுதான் என் நிலைப்பாடு. த.மு.மு.க நடத்திய கருத்தரங்கில் அப்சலுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை எதிர்த்து ஒருமணிநேரத்திற்குமேல் பேசினேன். அது தமிழன் தொலைக்காட்சியில்கூட ஒளிபரப்பானது. ஆனால் இஸ்லாமிய அமைப்புகளைப் பொறுத்தவரை அப்சலுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத்தண்டனையைத் தான் எதிர்க்கிறார்களே தவிர ஒட்டுமொத்த தூக்குத்தண்டனையை அல்ல. ஆனால் அவர்களும் ஒட்டுமொத்தமாக மரணதண்டனையை எதிர்க்கவேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

இப்போது நீங்கள் ஆரம்பித்திருக்கும் இயக்கம் பற்றிச் சொல்லுங்களேன்..
திராவிட இயக்கங்கள் என்பவை காலத்தின் தேவை. ஆனால் இப்போது தமிழ்த்தேசிய அமைப்புகளிலும், தலித் அமைப்புகளிலும் ஒருசாரார் திராவிட இயக்கம் தேவையில்லையென்றும், திராவிட மாயை, திராவிடத்தால் வீழ்ந்தோம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இது கிளைமரத்தில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது போன்றது. திராவிட இயக்கங்களே எல்லாம் செய்துவிட்டன, வேறு இயக்கங்கள் தேவையில்லை என்று நான் கருதவில்லை. ஆனால் திராவிட இயக்கம்தான் அடித்தளம். தமிழின மேம்பாடு என்பது அதன் மேல்மட்டத்தின் மீது எழுப்பப்படவேண்டியது. திராவிடம் என்பது வெறுமனே மொழி சார்ந்ததோ, நிலம்சார்ந்ததோ மட்டுமில்லை, அது சாதி ஒழிப்பிற்கான, பார்ப்பன எதிர்ப்பிற்கான அரசியல் குறியீடு.

தமிழியக்கங்கள் என்பவைகளை நான் திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாகத்தான் பார்க்கிறேன். திராவிட இயக்கத்தையும், தமிழுணர்வாளர்களையும் ஒருங்கிணைப்பதுதான் எங்கள் பணி. ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் முழக்கத்தை நாங்கள் முன்வைக்கிறோம்.
எங்கள் அமைப்புக்கு மூன்று நோக்கங்கள் இருக்கின்றன.

1. தமிழின, தமிழ் மொழி மேம்பாடு
2. பகுத்தறிவு, சமூகநீதி, பெண்விடுதலை
3. உலகத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்திற்குக் குரல்
கொடுப்பது.


சனவரி 22 அன்று திராவிட இயக்கத்தமிழர் பேரவையின் தொடக்கவிழா சென்னைக் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. பேராசிரியர் அன்பழகன் கலந்துகொள்கிறார்.

தனிப்பட்ட முறையில் ஒரு கேள்வி, நீங்கள் தி.மு.கவின் ஆதரவாளராக மாறிவிட்டீர்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறதே..?
(சிரிக்கிறார்). ஆமாம். நான் எதையும் வெளிப்படையாகச் செய்பவன். மறைத்துப் பழகியவனில்லை. நான் தி.மு.க ஆதரவாளன் தான். இன்னும் சொல்லப்போனால் கலைஞர் ஆதரவாளன் தான். திமுகவையும் கலைஞரையும் கூட நான் ஒருகாலத்தில் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். ஆனால் இப்போது திமுக சரியான அமைப்பு என்று எனக்குத் தோன்றுகிறது. திமுகவில் குறைபாடுகளே இல்லையென்று சொல்லமுடியாது. கோட்பாடு இல்லாமல் நிறுவனமில்லை. ஆனால் நிறுவனமாகும்போது சில பிரச்சினைகள் வரும்.

அதேபோல திமுகவிற்கும் சில சறுக்கல்கள் வந்திருக்கின்றன. நாளை எங்கள் இயக்கத்திற்கும் கூட அப்படிப்பட்ட நிலை வரலாம். ஆனால் இப்போதுள்ள கட்சிகளில் திமுக சிறந்ததாக எனக்குத் தோன்றுவதால் நான் தி.மு.கவை ஆதரிக்கிறேன்.
சந்திப்பு : சுகுணாதிவாகர்

1 comment:

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

இஸ்லாமிய அமைப்புகளைப் பொறுத்தவரை அப்சலுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத்தண்டனையைத் தான் எதிர்க்கிறார்களே தவிர ஒட்டுமொத்த தூக்குத்தண்டனையை அல்ல. ஆனால் அவர்களும் ஒட்டுமொத்தமாக மரணதண்டனையை எதிர்க்கவேண்டும் என்பதுதான் என் விருப்பம்."

இந்த வரிகள் மனித நேயத்தின் வெளிப்பாடு.