Friday, June 15, 2007

அது ஒரு பொடா காலம்! (10)

அது ஒரு பொடா காலம்! (10)

சுப.வீரபாண்டியன்

அந்த அதிர்ச்சிச் செய்தியை அன்றைய மாலை நாளேடுகள் வெளியிட்டு இருந்தன.

‘நெடுமாறன் கட்சிப் பிரமுகர் வீட்டுக் கோழிப் பண்ணையில் ஜெலட்டின் குச்சிகள்!’ என்று தலைப்பிட்டு, காவல்துறை கொடுத்த செய்தி அது. எங்கள் வழக்குரைஞர்கள் சந்திரசேகரன், புருசோத்தமன் இருவரும் அது பற்றி விரிவாகக் கூறினர்.

நவம்பர் 6&ம் தேதி அதிகாலை, மானாமதுரையில் உள்ள பரந்தாமன் இல்லத்துக்குச் சென்ற உளவுத்துறைக் காவல் பிரிவினர், கோழிப் பண்ணையைச் சோதனை யிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

வீட்டிலிருந்த அவருடைய மகன் ரகுராமனை அழைத்துக்கொண்டு அங்கே போய், பல இடங்களைச் சோதனையிட்டுள்ளனர். ஒரு பிரிவினருடன் ரகு நின்றுகொண்டு இருக் கும்போது, இன்னொரு பிரிவினர், ‘வாங்க... இங்கே வாங்க’ என்று கூவியுள்ளனர்.

‘இதோ... இங்கே பாருங்க, ஜெலட்டின் குச்சிகளும் டெட்டனேட்டர்களும் மறைத்து வைக்கப்பட்டுள்-ளன’ என்று, எல்லாவற்றையும் வீடியோ படம் எடுத்து, அவர் மகனையே சாட்சியாக ஆக்கிவிட்டனர்.

எனினும், அவர்கள் கவனத்தில் கொள்ளாமல்போன சில சட்ட நுணுக்கங்களை எங்களுக்கு வழக்குரைஞர்கள் தெளிவுபடுத்தினர்.

‘‘ஒண்ணும் கவலைப்படாதீங்க... இதெல்லாம் கோர்ட்டில் நிக்காது” என்று பரந்தாம-னுக்கு ஆறுதல் கூறினர். ஆறுதல் மொழிகள் அவ்வளவாக வேலை செய்யவில்லை. கடுமையான மன உளைச்சலில் இருந்தார் பரந்தாமன். குடும்பத்தினருக்கும் ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என்று கவலைப்பட்டார்.

‘‘ஏன் சுபவீ... டெட்டனேட்டர்னு ஏதோ சொல்றாங்களே, அப்படின்னா என்ன..?’’ என்று என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு இருந்தார். ‘‘ஏன் அண்ணாச்சி, நான் மட்டும் என்ன இதுக்கு முன்னாடி வெடிகுண்டா வெச்-சுக்கிட்டு இருந்தேன்?’’ என்று நான் கேலியாகக் கேட்க, இருவரும் சிரித்தோம்.

மறுபடியும் கடும் மழை தொடங்கியது. இரண்டு நாள்கள் மழை பெய்யும் என்றும், புயல் சின்னம் தோன்றியிருப்பதாகவும் செய்தியில் சொன்னார்-களாம். மழையில் நனைந்தபடி, பரந்தாமன் மாடிக்கு ஓடினார். இரவு கடுமையாகக் காற்று வீசியது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டுவிட்டதால், சிறிது நேரம் முழுமையான இருட்டு, தனிமை, காற்று மழையின் இரைச்சல் என்று புதிய அனுபவமாக இருந்தது.

மின்சாரம் வந்து வந்து போய்க்-கொண்டு இருந்த அந்த இரவில், கடுங்குளிர் தாக்கத் தொடங்கிவிட்டது. கம்பிக் கதவு-களுக்குள் சாரல் விழுந்து விழுந்து, தரை ஏறத்தாழ ஈரமாகிவிட்டது. படுக்கவும் முடியாமல், நடக்கவும் முடியாமல்... அது ஒருவிதமான சோகம்!

சிறையில் கொடுக்-கப்படும் போர்வை, ஒன்றுக்கும் பயன்படவில்லை. உள்ளேயிருந்து ஒரு ‘ஜீன்ஸ்’ முழுக்கால் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டேன். ஒரு சட்டைக்கு மேல் இன்னொரு சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டேன்.


அந்த நேரம் பார்த்து மழைக்கோட்டு, கையில் விளக்குடன் வந்த ஒரு அதிகாரி என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். நள்ளிரவில் உடைமாற்றிக் கொண்டு இருப்பதைப் பார்த்துவிட்டு, ‘என்ன, இந்த ஆள் புறப்படுறானா?’ என்று எண்ணியிருக்கக் கூடும்.

‘‘ஒண்ணுமில்லே, ரொம்பக் குளிரா இருக்கு’’ என்றேன்.

‘‘அப்படியா!’’ என்றார் சந்தேகம் தீராமல்.

அன்று, நவம்பர் 13. செய்தித் தாளில் மதுரைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் நண்பர் வண்ணமுத்து வின் படம் இருப்பதைப் பார்த்துவிட்டு, செய்தியைப் படித்தபோது வலித்தது. மாரடைப்பு காரணமாகப் பேராசிரியர் வண்ணமுத்து மறைவு என்ற செய்தி என்னைத் துயரில் ஆழ்த்தியது.

நல்ல மனிதர். எனக்கு நல்ல நண்பர். 1976&ம் ஆண்டு, சென்னை எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியில் நான் பயிற்றுநராக வேலையில் சேர்ந்த-போது, வண்ணமுத்துவும் பாலசுந்தரமும்தான் எனக்கு நேர் மூத்த ஆசிரியர்கள். இரண்டு பேருமே பக்திப் பழங் களாக இருந்தார்கள். சைவ இலக்கியங்களில் இருவருக்கும் நல்ல தோய்வு. சிவன், சக்தி, முருகன் என்று அவர்கள் பேசிக்கொண்டு இருக்க, பெரியார், அண்ணா, பாரதி தாசன் என்று நான் பேசிக்கொண்டு இருப்பேன். அவர் கள் இருவரும் பட்டை பட்டை யாகத் திருநீறு பூசியிருப்பார்கள். நானோ, ‘கோயில் இல்லா ஊரில் குடியிருப்போர் வாழ்க! குழைத்துநீறு பூசாக் கொள்கையினர் வளர்க! ஆயிரமாம் பகைகள் அணி வகுத்தபோதும் அயராத பெரியார் அருந்தொண்டு வெல்க!’ என்று 1972&ம் ஆண்டி லேயே கவிதை எழுதி யவன். ஆனாலும் எங்க ளுக்குள் நல்ல நட்பு இருந்தது. எப்போதும் என்னைத் ‘தம்பி, தம்பி’ என்று வாய் நிறைய அழைப்பார் வண்ண முத்து. இன்று அவர் போய்விட்டார்.

சிறையில் இருந்த நாள்களில் அடுத்தடுத்து எழுத்தாளர் சு.சமுத்திரம், கவிஞர் மீரா போன்ற-வர்களையும் காலம் விழுங்கிவிட்டது.

சமுத்திரம் ஓர் அரிய எழுத்தாளர். பன்னீர்ப் பூக்களைப் பற்றிப் பலர் பாடிக்கொண்டு இருந்த வேளையில், வியர்வை மலர்களின் வேதனையை வெளிப்படுத்தியவர் அவர்.

இன்றைய இளைஞர்கள் ‘ரசிகர்’களாக மட்டுமே நின்று, தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கும் அவலத்தை ‘மேய்ச்சல் நிலம்’ என்னும் பெயரில், நான் சிறப்பாசிரியராக இருந்த நந்தனில் தொடர்கதையாக எழுதினார். அப்போது இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொள்ளும் வாய்ப்புகள் கிடைத்தன.

கவிஞர் மீரா, எனக்கு மிகவும் மூத்தவர். நேரடிப் பழக்கம் குறைவு. ஆனாலும், எங்கள் கல்லூரி நாள்களில் அவர் எழுதிய ‘கனவுகள்+ கற்பனைகள் = காகிதங்கள்’ என்னும் கவிதை நூல்தான் எங்களின் வேதப் புத்தகம். காதல் சுவை நனி சொட்டச் சொட்டக் கவிஞரால் எழுதப்பட்ட நூல்.

காரைக்குடிக் கல்லூரி வகுப்பறையில் ஒரு நாள், ஒரு நண்பன், ‘‘ஏன் மச்சி... இந்தக் கவிதையைப் படிச்சியா..?


‘உனக்கென்ன
ஒரு பார்வையை
வீசிவிட்டுப் போகிறாய்...
என் உள்ளமல்லவா
வைக்கோலாய்ப் பற்றி எரிகிறது...’

அடடா! எப்படியிருக்கு?’’ என்று வகுப்புத் தோழிகள் காதில் விழுகிற மாதிரி உரத்துப் படிக்க, ‘‘தீயணைப்பு நிலையத்துக்குப் போன் பண்ணச் சொல்லுடி’’ என்று ஒரு மாணவி சொல்லிவிட்டுப் போனார்.

இப்படி அன்று ஏராளமான இளைஞர்களை ஈர்த்த, தன் சமூகக் கவிதைகளால் அண்ணாவின் பாராட்டைப் பெற்ற கவிஞர் மீராவின் இறப்புச் செய்தியும், எங்களைச் சிறையில்தான் வந்து எட்டியது.

துக்கமோ, இன்பமோ தூரத்திலிருந்துதான் பங்கேற்க முடியும் என்ற நிலையைச் சிறை உருவாக்கி-விட்டது.

சிறையில், கண்காணிப்பாளர் அழைத்து வரச் சொன்னதாக யாரேனும் வந்து கூப்பிட்டால், நல்லதாகவோ, கெட்டதாகவோ ஒரு செய்தி உள்ளது என்று பொருள்.

அன்று பரந்தாமனுக்கு அப்படி ஓர் அழைப்பு வந்தது. அவர் திரும்ப வரும் வரை, எதற்காக அழைத்திருப்பார்கள் என்று இங்கே யூகங்கள் ஓடும்.

15 நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வந்த அவரிடம், மீண்டும் பழைய துயரம் குடிகொண்டு இருந்தது. கெட்ட செய்திதான் என்று முடிவாகிவிட்டது. அவராகச் சொல்-லட்டும் என்று காத்திருந் தேன்.

‘‘போலீஸ் கஸ்டடிக்கு என்னை அனுப்பச் சொல்லி கோர்ட் உத்தரவாம்’’ என்றார்.

எனக்கும் அதிர்ச்சியாக இருந் தது. ஏன் அவருக்கு இப்படிச் சோதனை மேல் சோதனை என்று தோன்றியது. சிறை என்பது நீதி-மன்றக் காவல். அப்படி இல்லாமல் காவல் நிலையத்திலேயே வைத்து விசாரிப்பதைக் காவல் துறைக் காவல் என்பார்கள்.

காவல் துறைக் காவலில் பல சித்ரவதைகள் நடக்கும் என்று கேள்விப்பட்டுள்ளோம். இப்போது அது போன்ற காவல் பரந்தாமனுக்கு எதற்காக என்று புரியவில்லை. என்ன ஆகுமோ என்ற கவலை எல்லோரையும் பற்றிக்-கொண்டது!


\ (தொடரும்)


மிக்க நன்றி: ஆனந்த விகடன்

No comments: