Friday, May 11, 2007

அது ஒரு பொடா காலம்! (5)

அது ஒரு பொடா காலம்! (5)

சுப.வீரபாண்டியன்

என்னைப் பார்த்ததும், துப்பாக்கி ஏந்திய இருபது காவலர்கள், தடதடவென்று ஓடிவந்து என்னைச் சூழ்ந்துகொண்டார் கள். ஒருவர் என் கைகளைப் பிடித்து விலங்குகளை மாட்டத் தொடங்கினார். சட்டென்று நான் கைகளைப் பின்னிழுத்துக் கொண்டேன். ‘‘என்ன இதெல்லாம்’’ என்று கேட்டேன். ‘‘விலங்கு மாட்டி அழைத்துச் செல்வதுதான் சட்டம்’’ என்றார்கள். ‘‘அந்தச் சட்டம் எங்கே இருக்கிறது?’’ என்றேன். எங்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. ‘‘நீங்க ஒத்துழைக்கலைன்னா, அப்புறம் நாங்க ஃபோர்ஸ் (யீஷீக்ஷீநீமீ) யூஸ் பண்ணவேண்டி வரும்’’ என்று மிரட்டலாகச் சொன்னார் காவல் அதிகாரி. ‘‘பண்ணுங்க’’ என்றேன். பிறகு சற்றுத் தணிந்த குரலில், ‘‘ஏன் இப்படி வம்பு பண்றீங்க?’’ என்றார்.

நான் விளக்கமாக விடை சொன்னேன். ‘‘நான் பேசுவது வம்பு இல்லை; சட்டம். பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு, விலங்கு மாட்டிக்கொள்வதற்கு எல்லாம் வெட்கப்பட முடியாது. எங்கள் பாட்டன் செக்கே இழுத்திருக்கிறார். ஆனால், நீங்கள் சட்டத் துக்குப் புறம்பாக நடந்துகொள்கிறீர்கள் என்பதால்தான் நான் ஒத்துழைக்க மறுக்கிறேன்’’ என்று கூறிவிட்டு, சிறப்பு அனுமதி பெற்ற வழக்குகளைத் தவிர பிறவற்றில் எந்த ஒரு கைதிக்கும் கைவிலங்கு போடக் கூடாது என்று அறிவித்த உச்சநீதிமன்ற ஆணையை, அதன் எண், வருடம், மாதம், தேதியோடு சொன்னேன். ‘‘நான் இவ்வளவு ஆதாரத்தோடு சொன்ன பிறகும், எனக்கு நீங்கள் விலங்கிட்டு அழைத்துச் சென்றால், நீதிமன்றத்தில் இது குறித்துக் கண்டிப்பாக முறையிடுவேன்’’ என்றேன்.

இப்போது அவர்களின் வேகம் குறைந்திருந்தது. அதிகாரிகள் தனியாகப் போய் பேசிவிட்டுத் திரும்பி வந்தனர். ‘‘சரி, வாங்க போகலாம்’’ என்றார்கள். விலங்குகள் மாட்டப்படவில்லை.

ஆனால், இதற்கான எதிர்வினையை அவர்கள் நீதிமன்றத்தில் காட்டினார்கள். அங்கே உறவினர்களும் இயக்கத் தோழர் களும் நண்பர்களும் ஏராளமாகக் காத்திருக்க, யாரையும் என்னோடு பேசவிடாமல் கெடுபிடி செய்தனர்.

என் மகன் இலெனின் மட்டும், பேத்தி ஓவியாவைத் தூக்கிக்கொண்டு உள்ளே வர முயற்சித்தான். காவலர்கள் விடவில்லை. துப்பாக்கிகளைத் தாண்டி, பத்து மாதக் குழந்தையான என் பேத்தியின் முகம் தெரிந்தது. அந்தச் சூழலில் குழந்தையின் முகம் மிரண்டு போய்க்கிடந்தது. காவல் துறை வட்டத்தைக் விலக்கிக்கொண்டு, குழந்தையை நோக்கி நடந்தேன். வழி மறித்து, ‘‘அங்கே போகக் கூடாது!’’ என்றனர். ‘‘ஏன்?’’ என்றேன். ‘‘சட்டத்தில் அதற்கெல் லாம் இடமில்லை!’’

கோபம் கொள்ளுதல் என் இயல்பன்று. ஆனாலும், சில வேளைகளில் சினம், மனிதனின் அடையாளம். இப்போது எனக்குள்ளி ருந்து அந்த அடையாளம் வெளிப்பட்டது. உரத்துப் பேசினேன். ‘‘உங்கள் மிரட்ட லுக்குப் பயப்பட முடியாது’’ என்று சத்தம் போட்டேன். ‘‘வராந்தாவில் என்ன சத்தம்?’’ என்று கேட்ட நீதிபதி, செய்தியை அறிந்து என்னை உள்ளே அழைத்து வரச் சொன்னார்.

நீதிபதி முன் நிறுத்தப்பட்ட நான், விலங்கிட முயற்சித்த நிகழ்விலிருந்து எல்லாவற்றையும் கூறிவிட்டு, ‘‘குழந்தை யைக் கொஞ்சுவதற்குக்கூடவா பொடா சட்டம் தடை விதிக்கிறது?’’ என்று கேட் டேன். நீதிபதி என்ன சொல்லப் போகிறார் என்பதை எல்லோரும் ஆவலுடன் எதிர் நோக்கிக் காத்திருந்தனர்.

வழிக்காவலர்களுக்குத் தலைமை ஏற்று வந்த உதவி ஆணையரை (ஏ.சி) நீதிபதி அழைத்தார். ‘‘ஏன் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறீர்கள்?’’ என்று சற்று கடுமையாக அவர் கேட்ட கேள்விக்கு, விடையேதும் சொல்லாமல் நின்றிருந்தார் காவல் அதிகாரி. ‘‘இனிமேல் இங்கு அழைத்துவரப்படும் கைதிகள் யாருக்கும் என் அனுமதி இல்லாமல், விலங்கு பூட்ட முயற்சிக்க வேண்டாம்’’ என்ற நீதிபதி, குழந்தையைத் தூக்கிக் கொஞ்சு வதற்கு என்னை அனுமதிக்குமாறு அந்த அதிகாரிக்கு அறிவுறுத்தி னார்.

வீட்டில், தெருவில், பூங்கா வில் குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த அனுபவம் எனக்கு உண்டு; உங்களுக்கும் இருக்கும். பரபரப்பான நீதிமன்ற நடை பாதையில், துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நெருங்கி நிற்க, பல்வேறு வகையான மனிதர்கள் அந்தக் காட்சியை வேடிக்கை பார்க்க, போராடிப் பெற்ற அனுமதியின் பேரில் பேத்தியைக் கொஞ்சி மகிழும் ‘பெரும் பாக்கியம்’ எல்லோருக்கும் வாய்த்து விடாது.

ஆனாலும், மிரண்டு போயிருந்த குழந்தையின் முகம் பார்த்தபின், முதலில் அந்த இடத்திலிருந்து குழந்தையை மட்டுமாவது ‘விடுதலை’ செய்துவிட வேண்டும் என்று தோன்றியது. இலெனினிடம், ‘‘தம்பி! ஓவியாவை நாளைக்குச் சிறைக்கே தூக்கிட்டு வா! இங்கே வேணாம். பாவம், பயப் படுது’’ என்று சொல்லி விட்டு, ஊர்தியை நோக்கி நடந்தேன்.

வழக்கத்துக்கு மாறாக, அன்று கைதிகள் பலர், சிறையில் மகிழ்வுடன் காணப்பட்டனர். நான் உள்ளே வந்து ஒரு மாதத்தில் அன்றுதான் அப்படி ஒரு முகமலர்ச்சியைப் பலரிடம் பார்த்தேன்.


காலை ‘படி’யாகச் சப்பாத்தி கொண்டுவந்த ஓர் இளைஞன், ‘ஐயா, நாளையிலேருந்து உங்க ளுக்கு இன்னொருத்தன் சப்பாத்தி கொண்டு வருவான்யா’’ என்றான்.

‘‘ஏம்ப்பா, நீ..?’’

‘‘விடுதலைங்கய்யா..! பத்து வருஷமாச்சு. நாளைக்கு ராத்திரி சாப்பாடு வீட்டுல தானுங்கய்யா. எங்க ஆத்தாகிட்ட மீனு வாங்கி கொழம்பு வைக்கச் சொல்லியிருக்கேன்.’’

‘‘அப்படியா! மகிழ்ச்சி ராஜா, தொடர்ந்து வீட்டுச் சாப்பாடே சாப்பிடு. மறுபடியும் சிறை சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டுடாதே!’’

அவன் சிரித்தான். ‘‘போதுங்கய்யா, இனிமே இங்க வர மாட்டேன்’’ என்றவன், ‘‘அந்தப் பையன்கிட்ட சொல்லியிருக்கேன். இதே மாதிரி நல்ல சப்பாத்தி போட்டுத் தருவான்’’ என்றான்.

விடுதலை ஆகப்போகும் அவன் என்னைப் பற்றியும் அக்கறை காட்டுகிறானே என்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், ‘இதே மாதிரி நல்ல சப்பாத்தி’ என்றானே, அங்குதான் ஒரு பேரச்சம் என்னைப் பற்றிக்கொண்டது.

எல்லாக் கைதிகளுக்கும், மூன்று வேளையும் ‘பட்டைச் சோறு’தான்! ஒரு நீளமான தட்டில் வைத்து நான்கு பேர் அதைத் தூக்கிக்கொண்டு வருவார்கள். பார்ப்பதற்குக் கொஞ்சம் வேறு மாதிரி இருக்கும்.

முதல் வகுப்புக் கைதிகளுக்கு மட்டும் சப்பாத்தி. ‘அடடா, அது ஒரு பெரிய வரம்’ போல முதலில் தோன்றும். சிலர் பகலிலும்கூடச் சப்பாத்தி கேட்டு வாங்கிக்கொள்வார்கள். ஒரு மாதத்தில் சலித்துப் போகும். ‘காலையில் சப்பாத்தி, கடும் பகல் சப்பாத்தி, மாலையில் சப்பாத்தி, மறுபடியும் சப்பாத்தி’ என்றால் யாருக்குத்தான் வெறுத்துப் போகாது! அதிலும் இரவுக்கான சப்பாத்தியை மாலை 5 மணிக்கே கொண்டுவந்து தந்து விடுவார்கள். இரவு எட்டு மணிக்கு அதை உண்ணும்போது, அட்டையைப் பிய்த்துத் தின்பது போல அவ்வளவு ‘மென்மை’யாக இருக்கும்.

இந்த இளைஞன் கொண்டுவரும் சப்பாத்தியோ பகலிலேயே கனமாய் இருக்கும். அதே மாதிரி தொடர்ந்து வரும் என்று எனக்கு ‘ஆறுதல்’ கூறிவிட்டு அவன் விடைபெற்றான்.

மதியப் ‘படி’யாகச் சோறு கொண்டுவந்த பெரியவரிடமும் ஒரு சுறுசுறுப்பு மகிழ்ச்சி! ‘என்ன... ஒங்களுக்கும் நாளைக்கு விடுதலையா?’’ என்று வேடிக்கையாகக் கேட்டேன். ‘‘அட! ஆமாங்கய்யா, எப்படிக் கரெக்கிட்டா சொல்லிப் போட்டீங்க?’’ என்றார்.

எனக்கு வியப்பாக இருந்தது. அருகிலிருந்த மோகனிடம், ‘‘என்ன இது, ரொம்பப் பேர் நாளைக்கு விடுதலைங்கிறாங்களே?’’ என்றேன்.

‘‘நாளைக்கு அண்ணா பிறந்த நாள் இல்லீங்களா... பொதுமன்னிப்பில் போயிடுவாங்க’’ என்றார்.

‘‘எல்லாப் பயலும் பொறப்புடு றானுங்க. நமக்குத்தான் இந்தக் கதவு எப்பத் தெறக்கும்னு தெரியலே!’’ & செல்வராஜின் குரல் விரக்தியாக வெளிப்பட்டது.

அன்று மாலை, மனு பார்க்க வந்த தங்கள் உறவினர்களிடம் நூற்றுக் கணக்கான கைதிகள் தம் உடைகள் மற்றும் பொருள்களை எல்லாம் கொடுத்து அனுப்பினர்.

நாளைக்கு வெளியே போகும் போது, அணிந்து செல்ல ஒரு நல்ல உடையை மட்டும் வரவழைத்துக் கொண்டனர். மற்றபடி, கை வீசிச் செல்ல வேண்டும் என்பது அவர்கள் விருப்பம்.

செப்டம்பர் 15 & அண்ணா பிறந்த நாள் வந்தது. ‘காவலர்கள் வருவார்கள்; அழைத்துச் செல்வார்கள்; அடை யாளங்களைச் சரிபார்த்து அனுப்பி வைப்பார்கள்... அவ்வளவுதான்! சிறகை விரிக்கலாம், வானில் பறக்கலாம்’ என்று கனவுகளோடு கைதிகள் பலர் காத்திருந்தனர்.

ஆனால், சிறையில் ஓர் அசைவும் தென்படவில்லை. மாலை ஆனவுடன், கைதிகளிடம் அச்சம் பரவத்தொடங் கியது. அதிகாரிகளிடம் ஓரிருவர் நேரடியாகவே கேட்டனர். ‘‘அரசாங் கத்துல இருந்து ஒரு உத்தரவும் வரலியே, நாங்க என்ன பண்றது?’’ என்று அவர்கள் கைவிரித்த பின்புதான், நிலைமை புரிந்தது.

இருள் கவிந்த வானம் போல் இருண்டது சிறை! எல்லோரும் வழக்கம் போல் அவரவர் அறைகளில் வைத்துப் பூட்டப்பட்டனர். அங்கே வீடுகளில் மீன்குழம்போடு காத்திருக்க, இங்கே இவர்கள் பட்டைச் சோறும் வேண்டாமென்று படுத்து உறங்கி னார்கள்.

அடுத்த நாள் காலையிலிருந்து, ‘ஏன், ஏன் இப்படி’ என்ற வினாக்கள் அலைமோதின. அண்ணாவின் பிறந்த நாளில், ஆண்டுகள் பலவாய்ச் சிறையில் இருப்போருக்குப் பொது மன்னிப்பு வழங்குவது என்பது நெடு நாளாக இருந்துவரும் மரபு. இந்த ஆண்டில் மட்டும் என்ன நேர்ந்தது என்று வாதங்கள் நிகழ்ந்தன.

‘‘அந்த அம்மா விடாதுடா நம்மளை யெல்லாம்..!’’

‘‘ஏன் விடாது? போன வருஷம் விடலையா?’’

‘‘இல்லையில்ல... நான் விசாரிச்சுட்டேன். இனிமே அண்ணாவுக்குப் பதிலா, அந்த அம்மாவின் பொறந்த நாளுக்குதான் விடப் போறாங்களாம்!’’

‘‘அப்படியா, அது பிப்ரவரி மாசம்ல வரும்! அதுவரைக்கும் இங்கேயே கெடக்க வேண்டியதுதானா?’’

இவையெல்லாம் அன்று எங்கள் செவிகளில் விழுந்த உரையாடல்கள். ஆனால், எல்லா நம்பிக்கைகளும் பொய்த்துப் போயின. யாரு டைய பிறந்த நாளிலும் பொதுமன்னிப்பு வழங்கப் படவே இல்லை.

ஆட்சி மாற்றம் ஏற் பட்ட பின், 2006&ம் ஆண்டு தான் மீண்டும் அந்த செப்டம்பர் 15 வந்தது.

அன்று காலை குளித்து முடித்த பின், ஒரு கருஞ்சட்டையை எடுத்து அணிந்துகொண்டேன்.

கறுப்புதான் எனக்குப் பிடித்த வண்ணம். வெயிலில் உழைப்பவர்கள், வியர்வையில் நனைபவர்கள், சூரியனை முதுகில் சுமப்பவர்கள் கறுப்பாகத்தான் இருப்பார்கள். எனவே, அது உழைப்பின் நிறம்; உயர்வின் நிறமும்கூட!

ஆனால், கறுப்புச் சட்டை அணிவது என்பது, சிறையில் ஏதோ எதிர்ப்பைக் காட்டுவது என்று பொருளாம். எனக்கு அது தெரியாது. காலையில் என் அறைக்குத் தற்செயலாக வந்த சிறைக் கண்காணிப்பாளர், ‘‘என்ன, இன்னிக்குக் கறுப்புச் சட்டை, எதுவும் பிரச்னையா?’’ என்றார்.

‘‘அதெல்லாம் ஒண்ணுமில்லை. இன்று நம் அய்யா பெரியாரோட பிறந்த நாளாச்சே! அதைத் தனிமையில் நானா கொண்டாடுறேன்’’ என்று சொல்லிச் சிரித்தேன்.

ஒவ்வொரு நாளும், மாலை ஆறு மணிக்கு உள்ளே வைத்துப் பூட்டப்படும்போது, இன்னும் 12 மணி நேரத்தை எப்படிக் கழிப்பது என்ற கவலை ஒட்டிக்கொள்ளும். அன்றைக்கும் தொற்றிக்கொண்டது.

அப்போது... வெளிக்கதவு திறக்கும் சத்தம்! கம்பிகளின் வழியே பார்த்தேன். சிறை அதிகாரி யும், அவரைத் தொடர்ந்து வெள்ளை முழுக்கைச் சட்டை, வேட்டி அணிந்த ஒரு நெடிய உருவமும் உள்ளே வந்தனர்.

‘‘துணைக்கு ஆள் வேணும்னு கேட்டீங்களா... ஒங்க கட்சிக்காரர் இன்னொருத்தரையும் அனுப்பி வெச்சிருக்காங்க’’ என்று சிரித்துக்கொண்டே சிறை அதிகாரி சொல்ல, பின்னால் நிற்பவரைக் கவனித்தேன்.

‘‘என்ன சுபவீ, எப்படி இருக்கீங்க?’’ என்று கேட்ட அவர், எங்கள் இயக்கத்தின் இன்னொரு பொதுச் செயலாளர் பரந்தாமன். ‘‘இன்னிக்கு அதிகாலையில மானாமதுரைக்கு வந்து என்னையும் பொடாவில் கைது பண்ணிட்டாங்க’’ என்றார்.

வருத்தம் என்பதைவிட, துணைக்கு ஒரு நண்பர் கிடைத்த மகிழ்ச்சிதான் என்னுள் மேலோங்கி நின்றது.

\ (தொடரும்)

No comments: