Thursday, January 26, 2006

ஒகேனக்கல் மண்ணை இழக்க மாட்டோம்!- சுபவீ

ஒகேனக்கல் மண்ணை இழக்க மாட்டோம்!

சுப.வீரபாண்டியன்


காவிரி ஆற்றில் தமிழர்களுக்கு உள்ள உரிமையை எப்போதும் மறுத்துவரும் கர்நாடகம், இந்த ஆண்டு பெருமளவு தண்ணீரை அனுப்பி வைத்தற்குக் காரணம் அதன் பெருந்தன்மையோ, ஞாயத்தைப் புரிந்துகொண்ட நிலைப்பாடோ அல்ல.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் இவ்வாண்டு ஏராளமான மழை பெய்துவிட்ட காரணத்தால் தண்ணீரைத் தேக்கிக் கொள்ள வழியில்லாமல் இங்கே அனுப்பி உள்ளது. அதன் லம் அங்கே வெள்ளம் வராமல் தடுத்துக்கொள்வதே கர்நாடகத்தின் திட்டம்.

கிருஷ்ணசாகர் அணை என்பது மிகப்பெரிய அணை. எளிதில் அந்த அணை நிறைந்துவிடாது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் நிறைந்துள்ளது. இந்த நிலையைக் கூட அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஒகேனக்கல் பகுதியைக் கைப்பற்றி, அதற்குச் சற்று முன்பு மேகதாது அணை ஒன்றைக் கட்டி விட்டால், ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வருவதைத் தடுத்துவிடலாம். இந்தத் திட்டத்தின் அடிப்படையில்தான் ஒகேனக்கல் சிக்கலைப் புதிதாகக் கர்நாடகம் கையில் எடுக்கிறது.

25 ஆண்டுகளுக்கு முன்பே ஒருமுறை இப்படியொரு முயற்சியில் கர்நாடகம் இறங்கியது. அப்போது அங்கு குண்டுராவ் முதலமைச்சராக இருந்தார். ஒகேனக்கலிலிருந்து 15 கி.மீ. தொலைவில் மேகதாதுத் திட்டம் அமையும் என்றும், அதனை உடனடியாகத் தொடங்க இருப்பதாகவும் அவர் அறிவித்தார்.

அப்போதிருந்த தமிழக அமைச்சரவையும், சட்டமன்றமும் அதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நின்று அதனை எதிர்த்தன. தமிழக மக்களிடம் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. அதன் விளைவாக அத்திட்டத்தை அன்று குண்டுராவ் கைவிட்டார். மீண்டும் இன்று கர்நாடகம் அதைக் கையில் எடுக்கிறது.

எந்த ஆவணங்களும் சான்றுகளும் இல்லாமல், ஒகேனக்கல் எங்களுக்கே சொந்தம் என்று கர்நாடகம் சொல்லுவது எவ்வளவு பெரிய மோசடி!. பொய்யை மெய்யாக்குவதற்கு கன்னட வெறியர்களின் இயக்கங்களும், கர்நாடக அரசும் மிக விரைவாக வேலை செய்கின்றன.

தங்கள் கொடியை நாட்டுவதற்கு செங்கற்களோடும், சீமெந்தோடும் ஒகேனக்கல் பகுதியில் அவர்கள் குவிந்திருக்கிறார்கள். தமிழக அரசியல் கட்சிகளும், தமிழக மக்களும் அதுபற்றிக் கவலை ஏதுமின்றி ஆழ்ந்த நித்திரையில் மூழ்கி உள்ளார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தமிழகத்தின் ஊடகங்களுக்குத் திரைப்பட நடிகையைப் பற்றிய செய்திதான் பெரிதாய் இருக்கிறதே தவிர, இருக்கும் மண்ணையும் இழக்கப்போகும் அவலம் பெரிதாய்ப் படவில்லை.

கர்நாடகம் ஒகேனக்கல் பகுதியைக் குறிவைப்பதற்கு வேறு சில பொருளியல் காரணங்களும் உள்ளன. ஏறத்தாழ 45 ஆண்டுகளுக்கு முன்னால் ஒகேனக்கல் மின் உற்பத்தித் திட்டம் என ஒரு திட்டம் வகுக்கப்பட்டது.

2581961 அன்று மத்திய நீர் மற்றும் மின்சக்திக் குழுவிற்கு, கர்நாடகத்தில் உள்ள சிம்சா மின்நிலையத்திற்குக் கீழே ஒகேனக்கல் மின் உற்பத்தி நிலையம் ஒன்றைத் தொடங்குவதற்கான திட்டத்தைத் தமிழக அரசு அனுப்பி வைத்தது.

அத்திட்டத்தின்படி காவிரியில் இரண்டு அணைகள் கட்டப்படும். முதலாவது அணை சுந்தர்பெட்டா மலையில் அமையும். அந்த அணையின் உயரம் ஆற்றுப் படுகையில் இருந்து 449 அடி ஆகும். அந்த அணையின் அடிவாரத்தில் ஒவ்வொன்றும் 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் 6 மின் நிலையங்கள் அமைக்கப்படும்.

இரண்டாவது அணை ஒகேனக்கலுக்கு அருகில் அமையும். இந்த அணையின் அடிவாரத்தில் ஒவ்வொன்றும் 50 மெகாவாட் உற்பத்தி செய்யும் திறன்படைத்த 4 மின் நிலையங்கள் அமைக்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்பதோடு, இதனால் ஏற்படும் பயன் இரண்டு மாநிலங்களுக்கும் உரியதாக இருக்கும். நீரிலிருந்து இம்மின்சார உற்பத்தி அமைவதால், நிலக்கரி பெருமளவில் மிச்சமாகும்.

அத்திட்டத்தின்படி கட்டப்படும் இரண்டு அணைகளில் தேங்கும் நீரும், மின்சார உற்பத்திக்கு மட்டுமே அன்றி வேறு பாசன நோக்கம் எதற்கும் பயன்படக்கூடாது என்பதும் திட்டத்தின் ஒர் அங்கமாகும்.

இந்த அணைகள் கட்டப்படுவதால் வெள்ள அபாயம் தடுக்கப்படுகிறது. அதனைச் சுற்றுலாப் பகுதியாக ஆக்குவதன் மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. இத்தனை நன்மைகள் கொண்ட இத்திட்டம் இன்னும் நிறைவேற்றப் படாமலேயே உள்ளது. அத்திட்டத்தை இப்போதாவது நாம் வலியுறுத்திப் பெற வேண்டும்.

நம்டைய அலட்சியத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒகேனக்கல் பகுதியைக் கைப்பற்றுவதன் மூலம் அரசியல் பொருளியல் லாபங்களை ஈட்டுவதற்கு கர்நாடகம் முயற்சி செய்கிறது.

இது பகற் கொள்ளையைக் காட்டிலும் கொடுமையானது. தமிழகமே திரண்டெழுந்து இச் சதியை முறியடிக்க வேண்டும். தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் அனைத்தும் இத்தருணத்தில் ஓரணியில் திரண்டு நின்று போர்க்குரல் எழுப்ப வேண்டும்.

ஏற்கனவே தமிழகத்தின் வளமான நிலப்பகுதி பலவற்றை நாம் இழந்து நிற்கிறோம். இனியும் இழப்பதற்கு ஒன்றுமில்லை. எல்லோர் கவனமும் இதிலே திரும்பட்டும். இயக்கங்கள் எல்லாம் ஒருங்கிணைந்து கிளம்பட்டும்.

ஒகேனக்கல் என்பது தமிழக மண். ஒரு நாளும் அதை இழக்கச் சம்மதியோம்.

இறுதிப் புயல் வீசும்- சுபவீ

ஈழத்தில் எந்த நேரத்திலும் போர் மூளக்கூடும் என்பது இங்கு பலருக்கு ஒரு செய்தி மட்டுமே. வேறு பலருக்கு அது ஒரு செய்தி கூட இல்லை. ஆனால் ஈழ மக்களுக்கு அது வாழ்வின் ஓலம், உயிரின் வலி.

"18 வயது இளைஞர்கள்
பழகிக் கொண்டார்கள்
ஈழத்தில் களமாடவும்
இங்கு வாக்களிக்கவும்''

என்று ஒரு கவிதையை நீண்ட நாட்களுக்கு முன்பு படித்திருக்கிறேன். இன்றைக்கும் அவ்வரிகள் பொருத்தமாக உள்ளன. போர் என்பது பேரழிவு. வாழும் நிலத்தைக் சுடுகாடாக்கும் வன்முறை, உலகின் எந்த மூலையில் உள்ள மக்களும் போரை விரும்ப மாட்டார்கள். ஆனால் தங்கள் மீது திணிக்கப்படும் போரை, ஈழத்துப் போராளிகளும், தமிழீழ மக்களும் எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயத்திற்கு இப்போது தள்ளப்பட்டுள்ளனர்.

17122005 அன்று யாழ்ப்பாணத்தில் மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வாக தர்சணி என்ற இளம்பெண் இலங்கைக் கடற்படையினரால் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு உள்ளார். கல்லோடு கட்டப்பட்டு நீரில் மூழ்கிய நிலையில் அவரது உடல் கண்டு எடுக்கப்பட்டு உள்ளது. இலங்கை ஆயுதப்படையினரால் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வளாகத்தின் உள்ளேயும் வெளியேயும் பொதுமக்களுக்கு எதிராகக் காட்டுமிராண்டித் தனமான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டதை எதிர்த்து அங்கு உள்ள மாணவர்கள், பேராசிரியர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தலைமயில் இலங்கை மானிடரிங் மிஷன் என்ற அமைப்பிடம் மனுக் கொடுக்க ஊர்வலமாகச் சென்றார்கள். ஆனால், அவர்கள் இலங்கை இராணுவத்தால் தடுக்கப்பட்டு பல்கலைக் கழகத் துணைவேந்தரும், பேராசிரியர்களும், மாணவர்களும் இரத்தம் கொட்டும் அளவுக்குத் தாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தாங்கள் எச்சரிக்கை செய்வதற்காக வானில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இலங்கை இராணுவம் கூறினாலும், பேராசிரியர்களுக்கு மாணவர்களுக்கும் துப்பாக்கிச் சூட்டால் காயம் எற்பட்டு உள்ளது என்பதை மருத்துவர்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் அன்று நள்ளிரவில் தேவாலயத்தில், சீறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினர், மிகச் சிறந்த தமிழின உணர்வாளர், மனித நேயர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அவருடைய மனைவி உட்பட 8 பேர் படுகாயப்பட்டிருக்கிறார்கள். இந்தப் படுகொலைக்குப் பின்னால் சிங்கள இராணுவமும், துரோகக் கூட்டமும் ஒளிந்திருப்பதை எவராலும் எளிதில் உணரமுடியும்.

புலிகளை இடறும் முயற்சியில் இராணுவம் இறங்கி இருக்கிறது. அரசு அதற்குத் துணை போகிறது. விரைவில் அங்குப் போர் மூண்டால் அதற்குச் சிங்கள இனவெறியே காரணம் என்பதை அனைத்துலகச் சமூகம் அறிந்து கொள்ள வேண்டும். போருக்கான நாளை, சிங்களர்கள் குறிக்கட்டும். வெற்றிக்கான நாளை, தமிழர்கள் குறிப்பார்கள்.

"விரைவில் இறுதிப் புயல் வீசும்
வேங்கைகள் ஆள்வார் தமிழ்த் தேசம்.''

நெகிழ்ந்த நிகழ்வு- சுபவீ

சென்னையில் 24122005 அன்று நடைபெற்ற திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் நா. முத்துக்குமாரின் நூல்கள் வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். அ னா ஆ வன்னா, பாலகாண்டம், கண் பேசும் வார்த்தைகள் என அவர் எழுதிய மூன்று நூல்கள் அன்று வெளியிடப்பட்டன. அப்துல் ரகுமான், பாலு மகேந்திரா, தங்கர்பச்சான், அறிவுமதி, பாலா, ஜெயமோகன், பிரபஞ்சன், சீமான், பாமரன், இளம்பிறை எனப் பேச்சாளர்களின் வரிசை மிக நீண்டதாய் இருந்தது. மூன்று அமர்வுகளில் விழா நடைபெற்றது. இரவு 10.30 மணிக்கு விழா நிறைவடைந்தபோது, வீட்டிற்கு எப்படித் திரும்புவது என்ற கவலை பலரையும் பற்றிக்கொண்டது.

மூன்றாவது அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், பின்வரிசையில் என் அண்ணன் எஸ்.பி. முத்துராமன் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். மேடையில் இருந்த யாரும் அவரைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அவர் சற்றுக் காலம் தாழ்ந்து வந்திருக்கிறார். இருக்கைகள் அனைத்தும் நிறைந்துவிட்டதால், கூட்டத்தோடு கூட்டமாய் நின்றபடியே விழா நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அதைக் கவனித்த யாரோ, அவரை அழைத்து வந்து இரண்டாம் வரிசையில் அமர வைத்திருக்கிறார்கள். மிகச் சுருக்கமாகப் பேசிய திரைப்பட இயக்குனர் பாலா, தன் பேச்சின் முடிவில் ஒரு வேண்டுகோள் வைத்தார். மூத்த திரைப்பட இயக்குனரான எஸ்.பி. முத்துராமன் மேடைக்கு வந்து எங்களோடு அமர வேண்டும் என்பதே அவரது வேண்டுகோள். அதனை ஏற்று அண்ணன் மேடைக்குச் சென்றார்.

அப்போது மேடையில் கவிஞர் முத்துக்குமார், அவருடைய தந்தையார், கவிஞர் அறிவுமதி, திரைப்பட இயக்குனர்கள் சீமான், பாலா, லிங்குசாமி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் அமர்ந்திருந்தனர். அண்ணன் மேடையில் ஏறிய போது, அவர்கள் அனைவரும் எழுந்து நின்று கையொலி எழுப்பி அவரை வரவேற்றார்கள். முத்துக்குமார் அவருக்குச் சால்வை போர்த்தி வரவேற்றார். அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது. அந்த நிகழ்வில் நான் நெகிழ்ந்து போனேன் என்றுதான் கூறவேண்டும். அந்த மகிழ்ச்சி, அண்ணனுக்குக் கிடைத்த மதிப்பைக் கண்டு ஒரு தம்பி அடைந்த மகிழ்ச்சி மட்டுமன்று. பண்பாடும், மனித நேயமும் இந்த மண்ணில் இன்னும் மிச்சமிருப்பதைக் கண்டும் அடைந்த மகிழ்ச்சி அது.

தன் வயதுக்கும் அனுபவத்திற்கும் முன்னால், இவர்களெல்லாம் நேற்று முளைத்தவர்கள் என்று கருதாமல், கூட்டத்தில் ஒருவராய் நின்றபடியே விழாவைப் பார்த்துக் கொண்டிருந்தது அவருடைய பெருந்தன்மையைக் காட்டியது. இளைஞர்களாக இருந்தாலும், காதல், சேது, ஆனந்தம் முதலான பல வெற்றிப்படங்களைத் தந்துள்ள இன்றைய சாதனையாளர்களான அவர்கள், வயதையும், அனுபவத்தையும் மதித்து, அண்ணனை மேடைக்கு அழைத்து, எழுந்து நின்று வரவேற்ற தன்மை அவர்களின் நாகரிகத்தையும், பண்பாட்டையும் உணர்த்தியது. ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவும், மதிக்கவும் தெரிந்து கொண்ட உலகில், தலைமுறை இடைவெளி எழுவதற்கு வாய்ப்பில்லை.

நெகிழ்ந்த நிகழ்வு

சென்னையில் 24122005 அன்று நடைபெற்ற திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் நா. முத்துக்குமாரின் நூல்கள் வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். அ னா ஆ வன்னா, பாலகாண்டம், கண் பேசும் வார்த்தைகள் என அவர் எழுதிய மூன்று நூல்கள் அன்று வெளியிடப்பட்டன. அப்துல் ரகுமான், பாலு மகேந்திரா, தங்கர்பச்சான், அறிவுமதி, பாலா, ஜெயமோகன், பிரபஞ்சன், சீமான், பாமரன், இளம்பிறை எனப் பேச்சாளர்களின் வரிசை மிக நீண்டதாய் இருந்தது. மூன்று அமர்வுகளில் விழா நடைபெற்றது. இரவு 10.30 மணிக்கு விழா நிறைவடைந்தபோது, வீட்டிற்கு எப்படித் திரும்புவது என்ற கவலை பலரையும் பற்றிக்கொண்டது.

மூன்றாவது அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், பின்வரிசையில் என் அண்ணன் எஸ்.பி. முத்துராமன் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். மேடையில் இருந்த யாரும் அவரைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அவர் சற்றுக் காலம் தாழ்ந்து வந்திருக்கிறார். இருக்கைகள் அனைத்தும் நிறைந்துவிட்டதால், கூட்டத்தோடு கூட்டமாய் நின்றபடியே விழா நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அதைக் கவனித்த யாரோ, அவரை அழைத்து வந்து இரண்டாம் வரிசையில் அமர வைத்திருக்கிறார்கள். மிகச் சுருக்கமாகப் பேசிய திரைப்பட இயக்குனர் பாலா, தன் பேச்சின் முடிவில் ஒரு வேண்டுகோள் வைத்தார். மூத்த திரைப்பட இயக்குனரான எஸ்.பி. முத்துராமன் மேடைக்கு வந்து எங்களோடு அமர வேண்டும் என்பதே அவரது வேண்டுகோள். அதனை ஏற்று அண்ணன் மேடைக்குச் சென்றார்.

அப்போது மேடையில் கவிஞர் முத்துக்குமார், அவருடைய தந்தையார், கவிஞர் அறிவுமதி, திரைப்பட இயக்குனர்கள் சீமான், பாலா, லிங்குசாமி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் அமர்ந்திருந்தனர். அண்ணன் மேடையில் ஏறிய போது, அவர்கள் அனைவரும் எழுந்து நின்று கையொலி எழுப்பி அவரை வரவேற்றார்கள். முத்துக்குமார் அவருக்குச் சால்வை போர்த்தி வரவேற்றார். அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது. அந்த நிகழ்வில் நான் நெகிழ்ந்து போனேன் என்றுதான் கூறவேண்டும். அந்த மகிழ்ச்சி, அண்ணனுக்குக் கிடைத்த மதிப்பைக் கண்டு ஒரு தம்பி அடைந்த மகிழ்ச்சி மட்டுமன்று. பண்பாடும், மனித நேயமும் இந்த மண்ணில் இன்னும் மிச்சமிருப்பதைக் கண்டும் அடைந்த மகிழ்ச்சி அது.

தன் வயதுக்கும் அனுபவத்திற்கும் முன்னால், இவர்களெல்லாம் நேற்று முளைத்தவர்கள் என்று கருதாமல், கூட்டத்தில் ஒருவராய் நின்றபடியே விழாவைப் பார்த்துக் கொண்டிருந்தது அவருடைய பெருந்தன்மையைக் காட்டியது. இளைஞர்களாக இருந்தாலும், காதல், சேது, ஆனந்தம் முதலான பல வெற்றிப்படங்களைத் தந்துள்ள இன்றைய சாதனையாளர்களான அவர்கள், வயதையும், அனுபவத்தையும் மதித்து, அண்ணனை மேடைக்கு அழைத்து, எழுந்து நின்று வரவேற்ற தன்மை அவர்களின் நாகரிகத்தையும், பண்பாட்டையும் உணர்த்தியது. ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவும், மதிக்கவும் தெரிந்து கொண்ட உலகில், தலைமுறை இடைவெளி எழுவதற்கு வாய்ப்பில்லை.

எது பொது ஒழுங்கு- சுபவீ

இன்றைய நிகழ்ச்சிகள் பகுதியின் மூலம், கருத்து அமைப்பின் முதல் கூட்டம் சென்னையில் நடைபெறுவதை அறிந்து, பார்வையாளனாய் அங்குச் சென்றிருந்தேன். கவிஞர் கனிமொழியும், கார்த்திக் சிதம்பரமும் வரவேற்க, நடிகர் சத்யராசும், இதழாளர் சித்ரா ரவீந்திரநாத்தும் உரையாற்றினார்கள். கருத்துரிமை பற்றிய அன்றைய உரைகளுக்கிடையே வழக்கம் போல் குஷ்புவும் வந்து போனார். கடந்த மூன்று மாதங்களாகக் குஷ்பு கற்பு பற்றிய விவாதங்களில் பங்கேற்காமல் நான் மௌனமாகவே இருந்து வந்தேன். எனினும் அது குறித்து நடை பெற்ற எதிரெதிர்க் கூட்டங்கள் அனைத்திலும் பார்வையாளனாக அமர்ந்திருந்தேன்.

ஒரு நண்பர், ஏன் இந்தக் கள்ள மௌனம் என்று கூடக் கேட்டார். இல்லையில்லை, இது நல்ல மௌனம் என்று நான் விடையிறுத்தேன். இரண்டு தரப்புகளிலும், எனக்கு உடன்பட்ட கருத்துக்களும் இருந்தன. மாறுபட்ட கருத்துக்களும் இருந்தன. சிலவற்றில் சிறிது குழப்பமும் இருந்தது. எனக்கே தெளிவு எற்படாதபோது, பிறருக்கு நான் என்ன சொல்வது என்பதால்தான் அந்த மௌனம். குஷ்புவின் கருத்துக்கு எதிராக எழுந்த குரல்களில் வேறு ஒரு கோபம் பின்புலமாக இருந்ததை அனைவரும் அறிவோம். தங்கர்பச்சான் என்னும் அரிய கலைஞர், நடிகர் சங்கத்தினரால் இழிவுபடுத்தப்பட்டதற்கு எதிர் வினையாக அது இருந்தது என்பதை மறுக்க முடியாது. இன்று குஷ்புவிற்காக குரல் எழுப்புவோர், அன்று தங்கர்பச்சானுக்காக ஏன் குரல் எழுப்பவில்லை என்னும் கேள்வியில் நியாயம் உள்ளது. தன் கூற்றுக்காக அவர் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொண்ட பிறகும், நடிகர் சங்கத்திற்கு நேரில் வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கட்டப் பஞ்சாயத்து செய்த அராஜகத்தை அனைவரும் கண்டித்திருக்க வேண்டும்.

அதே நேரத்தில், தங்கர்பச்சானை இழிவுபடுத்தியதற்காகவும், சட்ட நெறிமுறைகளுக்குப் புறம்பாகக் கட்டப்பஞ்சாயத்து செய்ததற்காகவும் நடிகர் சங்கத்தையும், குஷ்புவையும் எதிர்த்து நேரடியான போராட்டத்தைத் தொடங்கியிருந்தால், கற்பு மீதான விவாதமே எழாமல் போயிருக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாமல் உண்மைச் சிக்கல் திசைதிரும்பிப் போனதால், கற்பு பற்றிய பிற்போக்கான, ஆணாதிக்கச் சொல்லாடல்களும் அரங்கேறவே செய்தன. இந்தச் சூழலில்தான் நான் மௌனம் காத்தேன்.

ஆனாலும் அன்று கருத்து அமைப்பில் அது குறித்து நான் ஒரு வினாவை எழுப்பினேன். அவ்வினா, அடுத்த நாள் தினகரன், தினமணி ஆகிய நாளேடுகளில் அரைகுறையாக வெளியாகியிருந்தது. ஆதலால் அன்று நான் எழுப்பிய வினா என்ன என்பது குறித்தும், அதில் என் நிலைப்பாடு என்னவாக இருந்தது என்பது குறித்தும் இப்போது விளக்கம் சொல்ல வேண்டிய கடமை எனக்கு எற்பட்டுள்ளது.

ஆங்கில ஏடுகளில் கட்டுரைகள் எழுதும், சித்ரா ரவீந்திரநாத் அன்று பேசும் பொழுது, அடுத்தவருக்குப் பாதிப்பு ஏற்படுத்தாமலும், பொது ஒழுங்கிற்குப் பங்கம் வராமலும், எல்லாவிதமான கருத்துகளையும் சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமை வேண்டும் என்று பேசினார். மற்றவர்களின் எண்ணமும் அதுவாகவே இருந்தது. இந்த இடத்தில்தான் என்னுடைய அடிப்படையான ஐயம் எழுந்தது. அதனை, பார்வையாளர்கள் நேரத்தில் நான் எழுப்பினேன்.

ஒரு கருத்தை மேடையில் பேசியதற்காகவே, ஒன்றரை ஆண்டு காலம் பொடாச் சிறையில் இருந்தவர்களில் நானும் ஒருவன். இன்று கருத்துரிமைக்காகக் குரல் கொடுக்கும் இந்து போன்ற நாளேடுகள், நாங்கள் கைது செய்யப்பட்டபோது வேறு விதமாகப் பேசின. வைகோவைக் கைது செய்த மறுநாள், அப்படிப் பேசுவது அவருடைய கருத்துரிமை, அவரை ஏன் கைது செய்தீர்கள் என்று கேட்டிருக்க வேண்டிய இந்து ஏடு, ஏன் இன்னும் நெடுமாறனையும் கைது செய்யாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டது. பிறகு, பொடா மறுஆய்வுக்குழு எங்கள் மீது சுமத்தப் பெற்ற குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் ஏதும் இல்லை என்று சொன்னபிறகு, இந்து ஏடு வருத்தம் தெரிவித்திருக்க வேண்டாமா? இல்லை, அப்போது இந்து மௌனமாக இருந்தது. அதுதான் இந்து ஏட்டின் கருத்துரிமைக் கோட்பாடு. அதனை அன்று நான் எடுத்துச் சொன்னேன். அதற்குச் சித்ரா விடை சொல்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் எதுவும் பேசவில்லை.

எங்களுக்கு எதிராகத் தலையங்கம் எழுதிய இந்து, கருத்துரிமை என்ற பெயரால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை அனுமதித்தால், சட்டமும் ஒழுங்கும் கெட்டுவிடும் என்று கூறியிருந்தது. துக்ளக் போன்ற ஏடுகளின் கருத்தும் அதுவாகவே உள்ளது. தமிழக அரசும் அதே பொது ஒழுங்கு சட்டம் என்பனவற்றைக் காரணம் காட்டியே எங்களைக் கைது செய்தது. கற்பு குறித்துக் கருத்துச் சொல்ல குஷ்புவிற்கு உரிமையில்லையா என்னும் கேள்வி இப்போது ஒரு பகுதியினரால் எழுப்பப்படுகிறது. உரிமை உண்டுதான். ஆனால் அது தமிழ்ப் பண்பாட்டையும், பொது ஒழுங்கையும் கெடுப்பதாக இருக்கிறது. அதனால் அதனை அனுமதிக்க முடியாது என்று இன்னொரு பகுதியினரிடமிருந்து விடை வருகிறது.

ஆக, பொது ஒழுங்கிற்குத் தீங்கு வராத கருத்துரிமையை அனைவரும் ஏற்றுக்கொண்டாலும், எது பொது ஒழுங்கு என்பதை வரையறுப்பதில் பெரும் சிக்கல் உள்ளது. பொது ஒழுங்கு என்பது அரசின் பார்வையில் ஒன்றாகவும், அமைப்புகளின் பார்வையில் இன்னொன்றாகவும், தனிமனிதர்களின் பார்வையில் வேறுவேறாகவும் உள்ளது. எனவே இதனை யார், எப்படி வரையறை செய்வது என்பதே அவ்வரங்கில் நான் எழுப்பிய வினா. மொத்தத்தில் பொது ஒழுங்கு என்பதை அவரவர் பார்வையில் முன்னிறுத்தி, கருத்துரிமைக்குத் தடை விதிக்கின்றோமோ என்பதே என்னுடைய அச்சமாக உள்ளது. நம்முடைய கருத்து வெளிப்பாடுகளால் சிதைந்து போகும் அளவிற்கு இந்நாட்டின் சட்டம் ஒழுங்கும், தமிழ்ப் பண்பாடும் பலவீனமாக உள்ளன என்று நான் கருதவில்லை.

எந்தக் கருத்து வேண்டுமானாலும் அரங்கிற்கு வரட்டும், வலியவை வாழும். பொருளற்றவைகளைக் காலம் புறந்தள்ளும். நமக்கு எதிரான கருத்துகளைக் கூடப் பிறர் வெளியிடும் உரிமைக்காகப் போராடுவதே கருத்துரிமைப் போராட்டம், அப்போராட்டமே இன்றைய தேவையாக உள்ளது என நான் உணர்கிறேன்.