Friday, June 08, 2007

அது ஒரு பொடா காலம்! (9)

அது ஒரு பொடா காலம்! (9)

சுப.வீரபாண்டியன்

நவம்பர் மாதத் தொடக்கத்தில் சில நல்ல செய்திகள் வந்தன. எந்த காஷ்மீரைக் காட்டி, இந்தியா முழுமைக்கும் பொடா சட்டத்தைக் கொண்டு வந்தார்களோ, அந்த காஷ்மீரில் பொடா விலக்கிக் கொள்ளப்பட்டது. பொடாவின் கீழ் அன்று சிறையில் அடைக்கப் பட்டு இருந்த ஜே.கே.எல்.எஃப். அமைப்புத் தலைவரான யாசின் மாலிக் விடுதலை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

‘‘என்னங்கய்யா இது, காஷ்மீர்லேயே பொடா கைதிகளை விடுதலை செய்யுறப்போ, உங்களை ஏன் விட மாட்டேங்குறாங்க?’’ என்று மோகன் கேட்டார். ‘‘எங்க மேல அம்மாவுக்கு அபாரமான அன்பு. அதான் விட மாட்டேங்குறாங்க’’ என்று வேடிக்கையாகச் சொன்னாலும், அந்த வினா ஆழமானது என்பதை நான் அறிவேன். அதற்கு விடை சொல்லத் தொடங்கினால், அது மிக நீளமானதாக அமையும்.

பொடா சட்டத்தை நடுவண் அரசு கொண்டுவந்தாலும், அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் அந்தந்த மாநில அரசுகளிடமே உள்ளது. எனவே, ஒருவரைப் பொடாவில் கைது செய்வதும் செய்யாமல் இருப்பதும் மாநில அரசுகளின் விருப்பு வெறுப்பை ஒட்டியதாக அமைந்துவிட்டது.

குஜராத்தில், 2002 பிப்ரவரிக்கும் ஏப்ரலுக்கும் இடையே ஏறத்தாழ 2,000 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். அந்தக் கொலை-களுக்காக எவர் ஒருவரும் பொடாவின் கீழ் கைது செய்யப்படவில்லை. மாறாக, 200&க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள், வேறுவேறு சிறு காரணங்களுக்காகப் பொடாவில் உள்ளே தள்ளப்பட்டனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், 60&க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் பொடாவில் கைது செய்யப்பட்டனர். பழங்குடி வகுப்பைச் சேர்ந்த, ஏழாம் வகுப்பு மாணவியான மயந்திரகுமாரி, பொடாவில் கைதான ‘பயங்கரவாதி’களில் ஒருவர். சிறுவர்களைத்தான் கைது செய்தார்கள் என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக, அம்மாநிலத்தில் ராஜ்சரத் என்ற 81 வயது முதிய-வரையும் பொடா கைதி ஆக்கி-னார்கள். அவரால் நடக்கவே முடியாது. ஆனாலும் ‘நடமாட முடியாத பயங்கரவாதி’யாக அவர் ஜார்கண்ட் அரசின் கண் களுக்குத் தெரிந்தார். அதே மாநிலத் தில், நக்ஸலைட் ஒருவருக்குத் தேநீர் கொடுத்ததற்காக, பன்சிதார் சாகு என்பவரும் நக்ஸ-லைட்டாகக் கருதப்பட்டு, பொடா சிறைக்கு வந்து சேர்ந்தார்.

இவ்வாறு, ஒவ்வொரு மாநிலத்திலும் நிலைமை வேறுவேறாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற இன்னொரு நிகழ்வும் எங்கள் சிந்தனையைத் தூண்டியது.

தாய்லாந்து நாட்டில், சிறீலங்கா அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் தொடங்கிய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்படுவதாகச் செய்தித்தாள்கள் கூறின.

சிறீலங்காவில் புலிகள் அமைப்புக்குத் தடை இல்லை. அவர்களோடு அதிகாரபூர்வமாகப் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. ஆனால், இந்தியாவில் புலிகளுக்குத் தடை. அவர்களை ஆதரித்துப் பேசியவர்களுக்குப் பொடா. இந்த அரசியல் விந்தைகளையெல்லாம் சொல்லிச் சிரிப்பதற்குக்கூட எங்க ளுக்கு யாரும் இல்லை.

தமிழக அரசியலில் எப்போதுதான் மாற்றம் வரும் என்று நாங்கள் எண்ணிக்கொண்டு இருந்த வேளை யில், அந்தச் செய்தி வெளியானது.

திராவிட முன்னேற்றக் கழகத் தின் தலைவர் கலைஞர், வேலூர் சிறைக்குச் சென்று வைகோவைச் சந்தித்தார் என்பதும், இருவரும் நெகிழ்ந்துபோனார்கள் என்பதும் நல்ல செய்தியாக இருந்தது.

இதனை, வெறும் தலைவர்களின் சந்திப்பாக மட்டும் நான் பார்க்கவில்லை. பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணியிலிருந்து, திராவிடக் கட்சிகள் விலகி வரக்கூடிய தொடக்கமாகவே அது தெரிந்தது.

இந்த இரு கட்சிகளுக்குள் ஏற்படுகிற நெருக்கம், காலப் போக்கில் பொடாவுக்கும், பா.ஜ.க. கூட்டணிக்கும் எதிரான ஒன்றாக அமைய வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது. அந்த விருப்பம், பிறகு நிறைவேறி யது என்பதே உண்மை.

ஒரு நாள் காலையில், கண்விழிக்கும்போது நல்ல மழை. அறைக்கதவைத் திறக்க வந்த காவலர், ‘‘என்ன சார், மேல தூறல் விழுகிறதுகூடத் தெரியாம நல்லாத் தூங்குறீங்களே?’’ என்றார். சிரித்துக் கொண்டே எழுந்தேன்.

இந்த ‘சார்’ மரியாதை எல்லாம் இது போல் ஒரு சில தொகுதிகளுக்கும், குறிப்பிட்ட ஒரு சிலருக்கும் மட்டுமே உரியது. மற்றபடி ‘பள்ளி எழுச்சிப் படலம்’ வேறு மாதிரி இருக்கும்.

தூக்கம் கலைந்த நான், மழை நன்றாகவே பெய்வதை அப்போது-தான் கவனித் தேன். மாடியிலிருந்த அவர்கள் நான்கு பேரும் கீழே வர முடியாமலும், நான் மேலே போக முடியா மலும் மழை எங்களைப் பிரித்துவிட்டது. ஏறத்தாழ இரண்டு, மூன்று மணி நேரம், அன்றைய மழை என்னைச் சிறைக்குள் சிறை வைத்து விட்டது.

அன்று காலை பரந்தாமன், நீதி மன்றம் செல்ல வேண்டும். மழை இன்னும் விடவில்லை என்பதோடு, அவருக்குச் சிறிது உடல் நலமில்லாமலும் இருந்தது. சிறைக்கு வந்ததி லிருந்தே அவ்வப்போது அவரை மூலநோய் சிரமப்படுத்திக்கொண்டு இருந்தது.

உதவிச் சிறை அதிகாரியை அணுகி, இன்று நீதிமன்றம் செல்ல உடல்நலம் இடம் தரவில்லை என்றும், மருத்துவரைச் சந்தித்துக் கடிதம் பெற்று, நீதிமன்றத் துக்கு அனுப்ப விரும்புவ தாகவும் கூறினார். அப்படி ஒரு நடைமுறை உண்டு. மருத்துவர் பரிந்துரை செய்தால், சிறை அதிகாரி கள் அவருக்கு ஓய்வு கொடுக்க முடியும்.

ஆனால், அந்த நடை முறையைப் பொடா கைதிக்குப் பின்பற்ற, சிறை அதிகாரிகள் தயங்கினர். ‘மருத்துவரை வரவழைக்கிறோம்; உரிய மாத்திரைகளை எடுத்துக்கொண்டு நீதிமன்றம் சென்று வந்து விடுங்கள்’ என்று கூறிவிட்டனர்.

அவ்வாறே, பாதிக்கப்பட்ட உடல் நலத்தோடு, காலை 10 மணி அளவில் பரந்தாமன் நீதிமன்றத்துக்குப் புறப் பட்டுப் போனார்.

ஒருவர் நீதிமன்றம் சென்றால், திரும்பி வரும்போது வெளியுலகச் செய்தி ஏதேனும் கொண்டுவருவார் என்ற எதிர்பார்ப்பு உண்டு. அன்று நானும் அப்படி எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

மதியம் இரண்டு மணியளவில், பரந்தாமன் சிறைக்குத் திரும்பி வந்தபோது, அவர் முகம் சோர்வாகக் காணப்பட்டது. ‘‘என்ன ஆச்சு... ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?’’ என்று கேட்டேன். ‘‘நீதிமன்றத்துக்கு வந்த கதிரவன் அதிர்ச்சியான செய்தி ஒண்ணு சொன்னாரு’’ என்றார்.

கதிரவன் அவருடைய இரண்டா வது மருமகன். சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞராக இருக்கிறார்.

‘‘இன்னிக்கு அங்கே போனவுடனே, ‘ரகுராமன்கிறது யாரு?’ன்னு நீதிபதி கேட்டார். ‘என் மகன்தான்’னு சொன்னேன். அப்புறம், ‘கலைமகள் கோழிப் பண்ணை யாருடையது?’ன்னு கேட்டார். ‘என்னுடையதுதான்’னேன். வேற ஒண்ணும் கேக்கலை. அடுத்த வாய்தா கொடுத்து அனுப்-பிட்டார்’’ என்றார் பரந்தாமன்.

‘‘பிறகென்ன?’’ என்றேன்.

‘‘இதையெல்லாம் ஏன் நீதிபதி கேக்குறார்னு, அங்கே வந்திருந்த என் மாப்பிள்ளைகிட்ட கேட்ட போதுதான், அவர் அப்படி ஓர் அதிர்ச்சியான விஷயத்தைச் சொன்னாரு!’’

\ (தொடரும்)

No comments: