Friday, June 15, 2007

அது ஒரு பொடா காலம்! (10)

அது ஒரு பொடா காலம்! (10)

சுப.வீரபாண்டியன்

அந்த அதிர்ச்சிச் செய்தியை அன்றைய மாலை நாளேடுகள் வெளியிட்டு இருந்தன.

‘நெடுமாறன் கட்சிப் பிரமுகர் வீட்டுக் கோழிப் பண்ணையில் ஜெலட்டின் குச்சிகள்!’ என்று தலைப்பிட்டு, காவல்துறை கொடுத்த செய்தி அது. எங்கள் வழக்குரைஞர்கள் சந்திரசேகரன், புருசோத்தமன் இருவரும் அது பற்றி விரிவாகக் கூறினர்.

நவம்பர் 6&ம் தேதி அதிகாலை, மானாமதுரையில் உள்ள பரந்தாமன் இல்லத்துக்குச் சென்ற உளவுத்துறைக் காவல் பிரிவினர், கோழிப் பண்ணையைச் சோதனை யிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

வீட்டிலிருந்த அவருடைய மகன் ரகுராமனை அழைத்துக்கொண்டு அங்கே போய், பல இடங்களைச் சோதனையிட்டுள்ளனர். ஒரு பிரிவினருடன் ரகு நின்றுகொண்டு இருக் கும்போது, இன்னொரு பிரிவினர், ‘வாங்க... இங்கே வாங்க’ என்று கூவியுள்ளனர்.

‘இதோ... இங்கே பாருங்க, ஜெலட்டின் குச்சிகளும் டெட்டனேட்டர்களும் மறைத்து வைக்கப்பட்டுள்-ளன’ என்று, எல்லாவற்றையும் வீடியோ படம் எடுத்து, அவர் மகனையே சாட்சியாக ஆக்கிவிட்டனர்.

எனினும், அவர்கள் கவனத்தில் கொள்ளாமல்போன சில சட்ட நுணுக்கங்களை எங்களுக்கு வழக்குரைஞர்கள் தெளிவுபடுத்தினர்.

‘‘ஒண்ணும் கவலைப்படாதீங்க... இதெல்லாம் கோர்ட்டில் நிக்காது” என்று பரந்தாம-னுக்கு ஆறுதல் கூறினர். ஆறுதல் மொழிகள் அவ்வளவாக வேலை செய்யவில்லை. கடுமையான மன உளைச்சலில் இருந்தார் பரந்தாமன். குடும்பத்தினருக்கும் ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என்று கவலைப்பட்டார்.

‘‘ஏன் சுபவீ... டெட்டனேட்டர்னு ஏதோ சொல்றாங்களே, அப்படின்னா என்ன..?’’ என்று என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு இருந்தார். ‘‘ஏன் அண்ணாச்சி, நான் மட்டும் என்ன இதுக்கு முன்னாடி வெடிகுண்டா வெச்-சுக்கிட்டு இருந்தேன்?’’ என்று நான் கேலியாகக் கேட்க, இருவரும் சிரித்தோம்.

மறுபடியும் கடும் மழை தொடங்கியது. இரண்டு நாள்கள் மழை பெய்யும் என்றும், புயல் சின்னம் தோன்றியிருப்பதாகவும் செய்தியில் சொன்னார்-களாம். மழையில் நனைந்தபடி, பரந்தாமன் மாடிக்கு ஓடினார். இரவு கடுமையாகக் காற்று வீசியது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டுவிட்டதால், சிறிது நேரம் முழுமையான இருட்டு, தனிமை, காற்று மழையின் இரைச்சல் என்று புதிய அனுபவமாக இருந்தது.

மின்சாரம் வந்து வந்து போய்க்-கொண்டு இருந்த அந்த இரவில், கடுங்குளிர் தாக்கத் தொடங்கிவிட்டது. கம்பிக் கதவு-களுக்குள் சாரல் விழுந்து விழுந்து, தரை ஏறத்தாழ ஈரமாகிவிட்டது. படுக்கவும் முடியாமல், நடக்கவும் முடியாமல்... அது ஒருவிதமான சோகம்!

சிறையில் கொடுக்-கப்படும் போர்வை, ஒன்றுக்கும் பயன்படவில்லை. உள்ளேயிருந்து ஒரு ‘ஜீன்ஸ்’ முழுக்கால் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டேன். ஒரு சட்டைக்கு மேல் இன்னொரு சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டேன்.


அந்த நேரம் பார்த்து மழைக்கோட்டு, கையில் விளக்குடன் வந்த ஒரு அதிகாரி என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். நள்ளிரவில் உடைமாற்றிக் கொண்டு இருப்பதைப் பார்த்துவிட்டு, ‘என்ன, இந்த ஆள் புறப்படுறானா?’ என்று எண்ணியிருக்கக் கூடும்.

‘‘ஒண்ணுமில்லே, ரொம்பக் குளிரா இருக்கு’’ என்றேன்.

‘‘அப்படியா!’’ என்றார் சந்தேகம் தீராமல்.

அன்று, நவம்பர் 13. செய்தித் தாளில் மதுரைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் நண்பர் வண்ணமுத்து வின் படம் இருப்பதைப் பார்த்துவிட்டு, செய்தியைப் படித்தபோது வலித்தது. மாரடைப்பு காரணமாகப் பேராசிரியர் வண்ணமுத்து மறைவு என்ற செய்தி என்னைத் துயரில் ஆழ்த்தியது.

நல்ல மனிதர். எனக்கு நல்ல நண்பர். 1976&ம் ஆண்டு, சென்னை எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியில் நான் பயிற்றுநராக வேலையில் சேர்ந்த-போது, வண்ணமுத்துவும் பாலசுந்தரமும்தான் எனக்கு நேர் மூத்த ஆசிரியர்கள். இரண்டு பேருமே பக்திப் பழங் களாக இருந்தார்கள். சைவ இலக்கியங்களில் இருவருக்கும் நல்ல தோய்வு. சிவன், சக்தி, முருகன் என்று அவர்கள் பேசிக்கொண்டு இருக்க, பெரியார், அண்ணா, பாரதி தாசன் என்று நான் பேசிக்கொண்டு இருப்பேன். அவர் கள் இருவரும் பட்டை பட்டை யாகத் திருநீறு பூசியிருப்பார்கள். நானோ, ‘கோயில் இல்லா ஊரில் குடியிருப்போர் வாழ்க! குழைத்துநீறு பூசாக் கொள்கையினர் வளர்க! ஆயிரமாம் பகைகள் அணி வகுத்தபோதும் அயராத பெரியார் அருந்தொண்டு வெல்க!’ என்று 1972&ம் ஆண்டி லேயே கவிதை எழுதி யவன். ஆனாலும் எங்க ளுக்குள் நல்ல நட்பு இருந்தது. எப்போதும் என்னைத் ‘தம்பி, தம்பி’ என்று வாய் நிறைய அழைப்பார் வண்ண முத்து. இன்று அவர் போய்விட்டார்.

சிறையில் இருந்த நாள்களில் அடுத்தடுத்து எழுத்தாளர் சு.சமுத்திரம், கவிஞர் மீரா போன்ற-வர்களையும் காலம் விழுங்கிவிட்டது.

சமுத்திரம் ஓர் அரிய எழுத்தாளர். பன்னீர்ப் பூக்களைப் பற்றிப் பலர் பாடிக்கொண்டு இருந்த வேளையில், வியர்வை மலர்களின் வேதனையை வெளிப்படுத்தியவர் அவர்.

இன்றைய இளைஞர்கள் ‘ரசிகர்’களாக மட்டுமே நின்று, தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கும் அவலத்தை ‘மேய்ச்சல் நிலம்’ என்னும் பெயரில், நான் சிறப்பாசிரியராக இருந்த நந்தனில் தொடர்கதையாக எழுதினார். அப்போது இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொள்ளும் வாய்ப்புகள் கிடைத்தன.

கவிஞர் மீரா, எனக்கு மிகவும் மூத்தவர். நேரடிப் பழக்கம் குறைவு. ஆனாலும், எங்கள் கல்லூரி நாள்களில் அவர் எழுதிய ‘கனவுகள்+ கற்பனைகள் = காகிதங்கள்’ என்னும் கவிதை நூல்தான் எங்களின் வேதப் புத்தகம். காதல் சுவை நனி சொட்டச் சொட்டக் கவிஞரால் எழுதப்பட்ட நூல்.

காரைக்குடிக் கல்லூரி வகுப்பறையில் ஒரு நாள், ஒரு நண்பன், ‘‘ஏன் மச்சி... இந்தக் கவிதையைப் படிச்சியா..?


‘உனக்கென்ன
ஒரு பார்வையை
வீசிவிட்டுப் போகிறாய்...
என் உள்ளமல்லவா
வைக்கோலாய்ப் பற்றி எரிகிறது...’

அடடா! எப்படியிருக்கு?’’ என்று வகுப்புத் தோழிகள் காதில் விழுகிற மாதிரி உரத்துப் படிக்க, ‘‘தீயணைப்பு நிலையத்துக்குப் போன் பண்ணச் சொல்லுடி’’ என்று ஒரு மாணவி சொல்லிவிட்டுப் போனார்.

இப்படி அன்று ஏராளமான இளைஞர்களை ஈர்த்த, தன் சமூகக் கவிதைகளால் அண்ணாவின் பாராட்டைப் பெற்ற கவிஞர் மீராவின் இறப்புச் செய்தியும், எங்களைச் சிறையில்தான் வந்து எட்டியது.

துக்கமோ, இன்பமோ தூரத்திலிருந்துதான் பங்கேற்க முடியும் என்ற நிலையைச் சிறை உருவாக்கி-விட்டது.

சிறையில், கண்காணிப்பாளர் அழைத்து வரச் சொன்னதாக யாரேனும் வந்து கூப்பிட்டால், நல்லதாகவோ, கெட்டதாகவோ ஒரு செய்தி உள்ளது என்று பொருள்.

அன்று பரந்தாமனுக்கு அப்படி ஓர் அழைப்பு வந்தது. அவர் திரும்ப வரும் வரை, எதற்காக அழைத்திருப்பார்கள் என்று இங்கே யூகங்கள் ஓடும்.

15 நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வந்த அவரிடம், மீண்டும் பழைய துயரம் குடிகொண்டு இருந்தது. கெட்ட செய்திதான் என்று முடிவாகிவிட்டது. அவராகச் சொல்-லட்டும் என்று காத்திருந் தேன்.

‘‘போலீஸ் கஸ்டடிக்கு என்னை அனுப்பச் சொல்லி கோர்ட் உத்தரவாம்’’ என்றார்.

எனக்கும் அதிர்ச்சியாக இருந் தது. ஏன் அவருக்கு இப்படிச் சோதனை மேல் சோதனை என்று தோன்றியது. சிறை என்பது நீதி-மன்றக் காவல். அப்படி இல்லாமல் காவல் நிலையத்திலேயே வைத்து விசாரிப்பதைக் காவல் துறைக் காவல் என்பார்கள்.

காவல் துறைக் காவலில் பல சித்ரவதைகள் நடக்கும் என்று கேள்விப்பட்டுள்ளோம். இப்போது அது போன்ற காவல் பரந்தாமனுக்கு எதற்காக என்று புரியவில்லை. என்ன ஆகுமோ என்ற கவலை எல்லோரையும் பற்றிக்-கொண்டது!


\ (தொடரும்)


மிக்க நன்றி: ஆனந்த விகடன்

Friday, June 08, 2007

அது ஒரு பொடா காலம்! (9)

அது ஒரு பொடா காலம்! (9)

சுப.வீரபாண்டியன்

நவம்பர் மாதத் தொடக்கத்தில் சில நல்ல செய்திகள் வந்தன. எந்த காஷ்மீரைக் காட்டி, இந்தியா முழுமைக்கும் பொடா சட்டத்தைக் கொண்டு வந்தார்களோ, அந்த காஷ்மீரில் பொடா விலக்கிக் கொள்ளப்பட்டது. பொடாவின் கீழ் அன்று சிறையில் அடைக்கப் பட்டு இருந்த ஜே.கே.எல்.எஃப். அமைப்புத் தலைவரான யாசின் மாலிக் விடுதலை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

‘‘என்னங்கய்யா இது, காஷ்மீர்லேயே பொடா கைதிகளை விடுதலை செய்யுறப்போ, உங்களை ஏன் விட மாட்டேங்குறாங்க?’’ என்று மோகன் கேட்டார். ‘‘எங்க மேல அம்மாவுக்கு அபாரமான அன்பு. அதான் விட மாட்டேங்குறாங்க’’ என்று வேடிக்கையாகச் சொன்னாலும், அந்த வினா ஆழமானது என்பதை நான் அறிவேன். அதற்கு விடை சொல்லத் தொடங்கினால், அது மிக நீளமானதாக அமையும்.

பொடா சட்டத்தை நடுவண் அரசு கொண்டுவந்தாலும், அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் அந்தந்த மாநில அரசுகளிடமே உள்ளது. எனவே, ஒருவரைப் பொடாவில் கைது செய்வதும் செய்யாமல் இருப்பதும் மாநில அரசுகளின் விருப்பு வெறுப்பை ஒட்டியதாக அமைந்துவிட்டது.

குஜராத்தில், 2002 பிப்ரவரிக்கும் ஏப்ரலுக்கும் இடையே ஏறத்தாழ 2,000 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். அந்தக் கொலை-களுக்காக எவர் ஒருவரும் பொடாவின் கீழ் கைது செய்யப்படவில்லை. மாறாக, 200&க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள், வேறுவேறு சிறு காரணங்களுக்காகப் பொடாவில் உள்ளே தள்ளப்பட்டனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், 60&க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் பொடாவில் கைது செய்யப்பட்டனர். பழங்குடி வகுப்பைச் சேர்ந்த, ஏழாம் வகுப்பு மாணவியான மயந்திரகுமாரி, பொடாவில் கைதான ‘பயங்கரவாதி’களில் ஒருவர். சிறுவர்களைத்தான் கைது செய்தார்கள் என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக, அம்மாநிலத்தில் ராஜ்சரத் என்ற 81 வயது முதிய-வரையும் பொடா கைதி ஆக்கி-னார்கள். அவரால் நடக்கவே முடியாது. ஆனாலும் ‘நடமாட முடியாத பயங்கரவாதி’யாக அவர் ஜார்கண்ட் அரசின் கண் களுக்குத் தெரிந்தார். அதே மாநிலத் தில், நக்ஸலைட் ஒருவருக்குத் தேநீர் கொடுத்ததற்காக, பன்சிதார் சாகு என்பவரும் நக்ஸ-லைட்டாகக் கருதப்பட்டு, பொடா சிறைக்கு வந்து சேர்ந்தார்.

இவ்வாறு, ஒவ்வொரு மாநிலத்திலும் நிலைமை வேறுவேறாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற இன்னொரு நிகழ்வும் எங்கள் சிந்தனையைத் தூண்டியது.

தாய்லாந்து நாட்டில், சிறீலங்கா அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் தொடங்கிய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்படுவதாகச் செய்தித்தாள்கள் கூறின.

சிறீலங்காவில் புலிகள் அமைப்புக்குத் தடை இல்லை. அவர்களோடு அதிகாரபூர்வமாகப் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. ஆனால், இந்தியாவில் புலிகளுக்குத் தடை. அவர்களை ஆதரித்துப் பேசியவர்களுக்குப் பொடா. இந்த அரசியல் விந்தைகளையெல்லாம் சொல்லிச் சிரிப்பதற்குக்கூட எங்க ளுக்கு யாரும் இல்லை.

தமிழக அரசியலில் எப்போதுதான் மாற்றம் வரும் என்று நாங்கள் எண்ணிக்கொண்டு இருந்த வேளை யில், அந்தச் செய்தி வெளியானது.

திராவிட முன்னேற்றக் கழகத் தின் தலைவர் கலைஞர், வேலூர் சிறைக்குச் சென்று வைகோவைச் சந்தித்தார் என்பதும், இருவரும் நெகிழ்ந்துபோனார்கள் என்பதும் நல்ல செய்தியாக இருந்தது.

இதனை, வெறும் தலைவர்களின் சந்திப்பாக மட்டும் நான் பார்க்கவில்லை. பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணியிலிருந்து, திராவிடக் கட்சிகள் விலகி வரக்கூடிய தொடக்கமாகவே அது தெரிந்தது.

இந்த இரு கட்சிகளுக்குள் ஏற்படுகிற நெருக்கம், காலப் போக்கில் பொடாவுக்கும், பா.ஜ.க. கூட்டணிக்கும் எதிரான ஒன்றாக அமைய வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது. அந்த விருப்பம், பிறகு நிறைவேறி யது என்பதே உண்மை.

ஒரு நாள் காலையில், கண்விழிக்கும்போது நல்ல மழை. அறைக்கதவைத் திறக்க வந்த காவலர், ‘‘என்ன சார், மேல தூறல் விழுகிறதுகூடத் தெரியாம நல்லாத் தூங்குறீங்களே?’’ என்றார். சிரித்துக் கொண்டே எழுந்தேன்.

இந்த ‘சார்’ மரியாதை எல்லாம் இது போல் ஒரு சில தொகுதிகளுக்கும், குறிப்பிட்ட ஒரு சிலருக்கும் மட்டுமே உரியது. மற்றபடி ‘பள்ளி எழுச்சிப் படலம்’ வேறு மாதிரி இருக்கும்.

தூக்கம் கலைந்த நான், மழை நன்றாகவே பெய்வதை அப்போது-தான் கவனித் தேன். மாடியிலிருந்த அவர்கள் நான்கு பேரும் கீழே வர முடியாமலும், நான் மேலே போக முடியா மலும் மழை எங்களைப் பிரித்துவிட்டது. ஏறத்தாழ இரண்டு, மூன்று மணி நேரம், அன்றைய மழை என்னைச் சிறைக்குள் சிறை வைத்து விட்டது.

அன்று காலை பரந்தாமன், நீதி மன்றம் செல்ல வேண்டும். மழை இன்னும் விடவில்லை என்பதோடு, அவருக்குச் சிறிது உடல் நலமில்லாமலும் இருந்தது. சிறைக்கு வந்ததி லிருந்தே அவ்வப்போது அவரை மூலநோய் சிரமப்படுத்திக்கொண்டு இருந்தது.

உதவிச் சிறை அதிகாரியை அணுகி, இன்று நீதிமன்றம் செல்ல உடல்நலம் இடம் தரவில்லை என்றும், மருத்துவரைச் சந்தித்துக் கடிதம் பெற்று, நீதிமன்றத் துக்கு அனுப்ப விரும்புவ தாகவும் கூறினார். அப்படி ஒரு நடைமுறை உண்டு. மருத்துவர் பரிந்துரை செய்தால், சிறை அதிகாரி கள் அவருக்கு ஓய்வு கொடுக்க முடியும்.

ஆனால், அந்த நடை முறையைப் பொடா கைதிக்குப் பின்பற்ற, சிறை அதிகாரிகள் தயங்கினர். ‘மருத்துவரை வரவழைக்கிறோம்; உரிய மாத்திரைகளை எடுத்துக்கொண்டு நீதிமன்றம் சென்று வந்து விடுங்கள்’ என்று கூறிவிட்டனர்.

அவ்வாறே, பாதிக்கப்பட்ட உடல் நலத்தோடு, காலை 10 மணி அளவில் பரந்தாமன் நீதிமன்றத்துக்குப் புறப் பட்டுப் போனார்.

ஒருவர் நீதிமன்றம் சென்றால், திரும்பி வரும்போது வெளியுலகச் செய்தி ஏதேனும் கொண்டுவருவார் என்ற எதிர்பார்ப்பு உண்டு. அன்று நானும் அப்படி எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

மதியம் இரண்டு மணியளவில், பரந்தாமன் சிறைக்குத் திரும்பி வந்தபோது, அவர் முகம் சோர்வாகக் காணப்பட்டது. ‘‘என்ன ஆச்சு... ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?’’ என்று கேட்டேன். ‘‘நீதிமன்றத்துக்கு வந்த கதிரவன் அதிர்ச்சியான செய்தி ஒண்ணு சொன்னாரு’’ என்றார்.

கதிரவன் அவருடைய இரண்டா வது மருமகன். சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞராக இருக்கிறார்.

‘‘இன்னிக்கு அங்கே போனவுடனே, ‘ரகுராமன்கிறது யாரு?’ன்னு நீதிபதி கேட்டார். ‘என் மகன்தான்’னு சொன்னேன். அப்புறம், ‘கலைமகள் கோழிப் பண்ணை யாருடையது?’ன்னு கேட்டார். ‘என்னுடையதுதான்’னேன். வேற ஒண்ணும் கேக்கலை. அடுத்த வாய்தா கொடுத்து அனுப்-பிட்டார்’’ என்றார் பரந்தாமன்.

‘‘பிறகென்ன?’’ என்றேன்.

‘‘இதையெல்லாம் ஏன் நீதிபதி கேக்குறார்னு, அங்கே வந்திருந்த என் மாப்பிள்ளைகிட்ட கேட்ட போதுதான், அவர் அப்படி ஓர் அதிர்ச்சியான விஷயத்தைச் சொன்னாரு!’’

\ (தொடரும்)